ADVERTISEMENT

இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகார்... விஜய் சேதுபதிக்கு சிக்கல்?

12:57 PM Dec 02, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'காக்கா முட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'ஆண்டவன் கட்டளை' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து இரண்டாவது முறையாக 'கடைசி விவசாயி' படத்தின் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து. விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். யோகி பாபு, பசுபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டே படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

‘கடைசி விவசாயி’ படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், பின்னர் அவரின் இசையை நீக்கிய இயக்குநர் மணிகண்டன், சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்திருந்தார். இந்நிலையில், தன் அனுமதியின்றி ‘கடைசி விவசாயி’ படத்திலிருந்து தனது பின்னணி இசையை நீக்கியிருப்பதாக இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் ‘கடைசி விவசாயி’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இந்தப் புகார் தற்போது படக்குழுவினருக்குப் பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT