கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துவருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது. இதனிடையே, தனுஷ் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்திலும் நடித்துவந்ததால், ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு படங்களின் பணிகளை முடித்துள்ளதால், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் பாடல் இசையமைக்கும் பணிகள் தற்போது முடிந்துள்ளன. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் செல்வராகவன், "இந்த விஷயத்தை என்னால் உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை" எனக் குறிப்பிட்டு செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.