காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மணிகண்டன், ஆண்டவன் கட்டளை படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, யோகி பாபு, பசுபதி உள்ளிட்ட பலரை வைத்து கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு, ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"கண்ணீர் திரையிடப் பார்த்தேன்,'கடைசி விவசாயி'. நிச்சயமாக இது இந்திய சினிமாவின் மைல்கல்களில் ஒன்று. இப்படியான படைப்பை அளித்த தோழன் மணிகண்டனுக்கு நிறைய நிறைய அன்பு. அசல் நாயகனாக வாழ்ந்திருக்கும் நல்லாண்டி அய்யாவுக்கு வணக்கங்கள். தயாரிப்பில் பங்களித்து நடித்திருக்கும் அற்புதமான கலைஞன் விஜய் சேதுபதி, நல்லிசை தந்திருக்கும் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இப்படத்தை பாராட்டி இயக்குநர் மிஷ்கின் நீண்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.