ADVERTISEMENT

அன்று சுவர்; இன்று குரு; என்றும் ஜென்டில்மேன்... இன்னொரு டிராவிட்டிற்கு வாய்ப்பே இல்லை...

10:33 AM Jan 11, 2019 | tarivazhagan

கிரௌண்டின் எல்லைக் கோட்டிற்கு அருகிலிருந்து ஒருவர் தனது முழுத்திறனையும் பயன்படுத்தி 150+ கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச ஓடி வருவார். அதை இன்னொருவர் க்ரிஸுக்கு அருகில் அசால்ட்டாக நிறுத்துவார். அதெப்படி 150+ கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்தை சற்றும் அசராமல் நிறுத்த முடியும்? எப்படி பந்தின் வேகம் பேட்ஸ்மேனால் குறைக்கப்பட்டது? பலருக்கும் இருக்கும் சந்தேகம். அந்த பவுலர் அக்தர். பேட்ஸ்மேன் டிராவிட். ஆம். அதற்கான விடை தெரிந்த ஒரே நபர் டிராவிட் மட்டுமே.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிவேக பந்துகளை மட்டுமில்லை. இன்ஸ்விங், அவுட்ஸ்விங், தலையை பதம் பார்க்க வரும் பவுன்சர்கள், யார்கர்கள், ஸ்பின் பந்துகள், கூக்லி, எந்த திசையில் பந்து செல்லும் என தெரியாத சர்ப்ரைஸ் ஸ்விங், ஸ்லொவ் பந்துகள் என அனைத்தையும் தன் டிஃபன்சிவ் பேட்டிங் மூலம் எதிர்கொள்ளும் திறமை உடையவர். எப்படிப்பட்ட பவுலரையும் தடுமாற வைப்பதில் டிராவிட்டுக்கு இணை யாரும் இல்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். 7-வது வீரராக களமிறங்கி 236 பந்துகளில் 95 ரன்கள் எடுத்திருந்த போது கிறிஸ் லூயிஸ் வீசிய பந்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ரஸ்செல் கைக்கு சென்றது. நடுவர் அவுட் தருவதற்கு முன்பே டிராவிட் வெளியேறினார். முதல் போட்டியிலேயே டிராவிட்டின் நேர்மையையும், பேட்டிங் ஸ்கில்லையும் உலகம் அறிந்தது.

புயல் வேகத்தில் பந்துகள் வந்தாலும், சுழற்பந்து வீச்சாக இருந்தாலும் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் டிராவிட். 2001-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி ஃபாலோவ்-ஆன் அடைந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் டிராவிட் 180 ரன்களும் மற்றும் லக்ஷ்மன் 281 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ஒருநாள் முழுவதும் இருவரும் விக்கெட் கொடுக்காமல் விளையாடினார்கள். இந்த ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் மறக்க முடியாத ஒன்று.

164 டெஸ்ட் போட்டிகளில் 31,258 பந்துகள் விளையாடி 13,288 ரன்கள், 52.31 சராசரி, 5 இரட்டை சதம், 36 சதம், 63 அரைசதம், அதிகபட்ச ரன்கள் 270. 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்கள், 39.17 சராசரி, 12 சதம், 83 அரைசதம், அதிகபட்ச ரன்கள் 153. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய அவர், அந்த போட்டியில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்து கொண்டு டி20 போட்டிக்கு ஏற்ப ஆடும் அவரது மாற்றம் அனைவரையும் வியக்க வைத்தது.

இந்திய அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லையா? விக்கெட் கீப்பர் இல்லையா? ஃபர்ஸ்ட் ஸ்லிப் பீல்டர் இல்லையா?. கேப்டன் இல்லையா? இரண்டு நாட்கள் பேட் செய்து டிரா செய்ய வேண்டுமா? கவலை வேண்டாம். நான் அதை செய்கிறேன் என செய்வார்.

வேறு ஒருவர் ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பீல்டிங் இடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை டிராவிட்டிடம். தயங்காமல் பீல்டிங் இடத்தை மாற்றி நின்றார். அணியின் பேலன்ஸிற்காக ஒருமுறை 5-வது வீரராக களமிறங்க வேண்டிய நிலை. அதையும் செய்தார். இந்திய அணியின் தேவையை மட்டுமே கருத்தில்கொண்டு தன்னை தியாகம் செய்து கொள்வார். இப்படி ஒருவர் இனி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. அது 2003-ஆம் ஆண்டே நடந்திருக்கும். ஜஸ்ட் மிஸ் என்று சொல்லலாம். அந்த தொடர் 1-1 என டிரா ஆனது. அந்த ஒரு வெற்றியை இந்தியாவிற்கு பெற்று தந்தது டிராவிட் தான். 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 233 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸ்ல் 72* ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

டிராவிட்டின் அர்ப்பணிப்பு ஆட்டத்திற்கு அன்று அவருக்கு கிடைத்த பாராட்டுகளை விட இன்று அவருக்கு கிடைக்கும் பாராட்டுகள் அதிகம். ஆம். லேட் ஹிட் போலத்தான். அவர் ஆடிய காலகட்டத்தைவிட தற்போதுதான் அவரின் தியாகம் அதிகம் உணரப்படுகிறது. அவர் ஓய்வு பெற்றபிறகு அந்த இழப்பை நாம் அதிகம் உணர்ந்தோம். அந்த வீரரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் ஈடுசெய்ய இன்னொரு வீரர் இன்னும் கிடைக்கவில்லை.

2011-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. அந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 591 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஒரு முனையில் அனைத்து வீரர்களின் விக்கெட்களையும் பறிகொடுத்து வந்தது. மறுமுனையில் டிராவிட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி நிதானமாக நின்று 146* ரன்கள் எடுத்தார். ஆண்டர்சன், பிராட், ப்ரெஸ்னன் ஆகியோரின் மிரட்டும் வேகப்பந்து வீச்சும், ஸ்வானின் சுழற்பந்து வீச்சும் இந்திய அணியை புரட்டிப்போட்டது. ஆனால் டிராவிட்டிடம் மட்டும் அந்த வீரர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை. இந்திய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனபோதும் டிராவிட் அவுட் ஆகாமல் நின்றார். இந்திய அணி ஃபாலோவ்-ஆன் அடைந்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத்தொடங்கியது. அதிலும் டிராவிட் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்த தொடரில் இந்திய அணியில் அவர் மட்டுமே சிறப்பாக விளையாடியிருந்தார்.

இந்தியா ஏ அணி, அண்டர்-19 அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போன்ற அணிகளின் பயிற்சியாளராக இருந்து பல இளம் வீரர்களை இந்திய அணிக்கு அடையாளம் காட்டியுள்ளார். ரஹானே, கருண் நாயர், ஜெயந்த் யாதவ், மனிஷ் பாண்டே, ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் இதில் அடங்கும். இன்னும் பல இளம் வீரர்களை இந்திய அணிக்காக செதுக்கிக்கொண்டு இருக்கும் சிற்பியாக டிராவிட் உள்ளார்.


தற்போது இந்திய அணியில் நட்சத்திர வீரர்களாக இருந்து வரும் கோலி, புஜாரா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கும் அவர்களின் பிளஸ், மைனஸ் அறிந்து அவற்றை சரிசெய்வது பற்றியும், அவற்றை எதிர்கொள்ளவது பற்றியும் தனியாக பயிற்சியளித்துள்ளர். அண்டர்-19 அணியின் பயிற்சியாளராக தனது பணியை சிறப்பாக செய்துவருகிறார். எதிர்கால இந்திய அணிக்கு வீரர்களை தயார்படுத்தி வருகிறார்.

2014-ஆம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள கோ ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளையில் இணைந்து அட்வைஸராக பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறவுள்ள இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.

வீரராக மட்டுமில்லை. ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார். ஜான் ரைட், கேரி க்ரிஸ்டன் என சிறந்த பயிற்சியாளர்கள் இருந்த காலத்தில் அவர் கேப்டனாக இல்லை. இந்திய அணி தன் சோதனை காலகட்டத்தில் இருந்தபோது அவர் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போது பயிற்சியாளர் கிரேக் சேப்பல். பல சீனியர் வீரர்களுக்கும் சேப்பலுக்கும் கருத்து வேறுபாடு வலுவாக இருந்தது. அதையும் தாண்டி அணியை பல சாதனைகள் படைக்க வழிநடத்தினார். ஆனால் அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்திய அணியின் தேவையில் எதுவெல்லாம் தன்னால் முடியுமோ அதையெல்லாம் செய்து வந்தார். இன்னும் ஒன்று மட்டும் அவரிடம் பெண்டிங் இருக்கிறது. ஆம். அது இந்திய சீனியர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவி. பதவி தேடி வந்தபோதும் மறுத்துவிட்டார். விரைவில் அவரை சீனியர் அணியின் பயிற்சியாளராக பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

என்னை போன்று அதிரடியாக விளையாட டிராவிட்டால் முடியும். ஆனால் அவரை போன்று பொறுமையாக விளையாட என்னால் முடியாது - க்ரிஸ் கெய்ல்.

டிராவிட் களமிறங்கிய 15 நிமிடத்தில் அவரது விக்கெட்டை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் மற்ற ஆட்டக்காரர்களின் விக்கெட்களை எடுக்க வேண்டும் - ஸ்டீவ் வாக்.

டிராவிட் அனைத்து பந்துகளையும் அடிக்கமாட்டார். அவர் குறைவான ஷாட்கள் ஆடுவதால் குறைவான தவறுகளே செய்வார். அதனால் அவரை வீழ்த்துவது கடினம் - சோயிப் அக்தர்.

தற்போதுவரை டிராவிட் சிறந்த வீரர், 90-களில் விளையாடிய வீரர்களில் ஆஸ்திரேலியா மைதானத்திற்குள் நுழையும் தைரியம் டிராவிட் ஒருவருக்கு மட்டுமே உள்ளது - க்ளென் மெக்ராத்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT