Skip to main content

தோழர் நல்லகண்ணு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த கம்யூனிஸ்ட்டுகள்...!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

பொதுவாழ்வில் உயர்ந்த குணமும் நேர்மை தவறா வழியில் வாழும் தலைவர்களின் வரிசை மிகவும் அரிதாகி விட்ட இந்த காலகட்டத்தில் தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வரும் சுதந்திரபோராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு இன்று 95 ஆவது பிறந்தநாள். இந்த நிகழ்வை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் இன்று விழா நடத்தினார்கள்.

 

Nallakannu birthday Celebration

 



இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் தா. பாண்டியன், மாநில செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . கட்சி அலுவலகம் அருகே உள்ள மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து அவரது மூத்த மகன் ராம்குமார் நேரில் வந்து வாழ்த்தினார்.

இதேபோல் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் நேரிலும் தொலைபேசியிலும் நல்லகண்ணு அவர்களை வாழ்த்தினார்கள். சென்னை பாலன் இல்லத்தில் நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளுடன், மறைந்த தொழிற்சங்கத் தலைவர் கே.டி.கே தங்கமணி நினைவு நாள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தோன்றிய 95 ஆவது அமைப்பு தினம் என மூன்று நிகழ்வுகளும் சேர்த்து விழா நடத்தப்பட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கிப் போய் விடுவோம்” - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Interesting thing happened when Dindigul Srinivasan and CPM candidate campaigned

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும், அதிமுக  கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்கும்  போட்டியிடுகின்றனர். அதுபோல் பிஜேபி கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர்  திலகபாமாவும் போட்டியிடுகின்றனர். இப்படி திண்டுக்கல் பாராளுமன்ற  தொகுதியில் மும்முனை போட்டி மூலம் தேர்தல் களமும் சூடுபிடித்து வருகிறது. 

வேட்பாளர்களும்  மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணிகளில்  ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் திண்டுக்கல் மாநகராட்சி  பகுதியான வேடபட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்  தனது ஆதரவாளர்களுடன் திறந்த ஜீப்பில் மக்களை சந்தித்து வாக்கு  சேகரித்துக் கொண்டு வந்தனர்.

அப்போது திடீரென எதிரே  எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்குடன் முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசனும் தனது ஆதரவாளர்களுடன் இரட்டை இலைக்கு வாக்கு  கேட்டு வந்து கொண்டிருந்தார். இப்படி இரண்டு வேட்பாளர்களும் தனது  ஆதரவாளர்களுடன் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அப்போது இரண்டு  வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கைகூப்பி வணங்கிக் கொண்டனர். 

அப்போது உடன் இருந்த சீனிவாசனோ, சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை பார்த்து ‘நல்வாழ்த்துக்கள் சச்சிதானந்தம் நமக்குள் சண்டை வேண்டாம் நாம்  ஒதுங்கி சென்று விடுவோம் மக்களிடம் ஆதரவு கேட்போம் யாருக்கு ஆதரவு  அளிக்கிறார்களோ அதை நாம் ஏற்றுக் கொள்வோம் மக்கள் தீர்ப்பே மகேசன்  தீர்ப்பு...’ என்று நகைச்சுவையாக பேசினார். அதைக் கண்டு கூட்டத்தில் இருந்த  இரண்டு கட்சி ஆதரவாளர்களுமே சிரித்து விட்டனர். அதைத் தொடர்ந்து  இரண்டு வேட்பாளர்களும் தனது ஆதரவாளர்களுடன் ஒதுங்கிச் சென்றனர்.