பொதுவாழ்வில் உயர்ந்த குணமும் நேர்மை தவறா வழியில் வாழும் தலைவர்களின் வரிசை மிகவும் அரிதாகி விட்ட இந்த காலகட்டத்தில் தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வரும் சுதந்திரபோராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு இன்று 95 ஆவது பிறந்தநாள். இந்த நிகழ்வை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் இன்று விழா நடத்தினார்கள்.

Nallakannu birthday Celebration

Advertisment

இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் தா. பாண்டியன், மாநில செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . கட்சி அலுவலகம் அருகே உள்ள மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து அவரது மூத்த மகன் ராம்குமார்நேரில் வந்து வாழ்த்தினார்.

இதேபோல் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் நேரிலும் தொலைபேசியிலும் நல்லகண்ணு அவர்களை வாழ்த்தினார்கள். சென்னை பாலன் இல்லத்தில் நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளுடன், மறைந்த தொழிற்சங்கத் தலைவர் கே.டி.கே தங்கமணி நினைவு நாள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தோன்றிய 95 ஆவது அமைப்பு தினம் என மூன்று நிகழ்வுகளும் சேர்த்து விழா நடத்தப்பட்டது.