Skip to main content

அன்று 8-ஆம் வகுப்பு, 8 கிராண்ட்ஸ்லாம்... இன்று எட்டாத சமூக சேவை...

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

பெரும்பாலான பிரபல விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு பிஸ்னஸ் அல்லது வருமானத்தை பிரதானமாக்கி விடுவார்கள். சிலர் மட்டுமே சமுதாயத்திற்கும், தான் சார்ந்த விளையாட்டிற்கும் சேவை செய்யும் மனப்போக்கு கொண்டவர்கள். தன் வாழ்க்கையில் கல்வியை அதிகம் கற்காத முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசி, தற்போது கல்வியையும், விளையாட்டையும் சிறுவர்களுக்கு ஊக்குவிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்போது இந்தியாவில் குழந்தைகளுக்கு கல்வியை எளிமைப்படுத்தும் விதமாக புது ப்ராடக்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.   

 

agaasi

 

1994-ஆம் ஆண்டு ஆண்ட்ரே அகாசி என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். அதன் மூலம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு உதவி வருகிறார். இவரின் இந்த முயற்சிகளுக்கு 1995-ஆம் ஆண்டு ஏ.பி.டி. ஆர்தர் ஆஷே சிறந்த மனிதாபிமான விருது வழங்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் சிறந்த சமூக சேவை செய்யும் விளையாட்டு வீரராக அகாசி உள்ளார் என்று பலரும் கூறுவது உண்டு.  
 

அகாசியின் பாய்ஸ் & கேர்ள்ஸ் கிளப் மூலம் ஆண்டுக்கு 2,000 குழந்தைகளுக்கு டென்னிஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண்ட்ரே அகாசி கல்வி நிறுவனமானது V20 புட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கி வருகிறது. 

2000-களில் மிகவும் பிரபலமான டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசி. எட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அகாசி, அவரது பார்ட்னருடன் இணைந்து அமெரிக்காவில் 90 சார்ட்டர் பள்ளிகளை அமைக்க 2013-ஆம் ஆண்டு முதல் $1 பில்லியன் தொகையை வழங்கியுள்ளார். பொதுநிதியை கொண்டு நடத்தப்படும் பெரும்பாலான சார்ட்டர் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதில்லை. 
 

டிஸ்லெக்ஸியா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் அகாசி. அவர்களுக்கு ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த எழுத்தறிவு தயாரிப்புகளை உருவாக்கும் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட் அப் மூலம் உதவி வருகிறார். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஸ்கொயர் பாண்டா என்ற ப்ராடக்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ப்ராடக்ட் டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்றலை எளிமைப்படுத்தும். சிறு வயதிலேயே குழந்தைகள் மத்தியில் டிஸ்லெக்ஸியாவின் சிக்கலை உணர செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ப்ராடக்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

agaasi

 

டிஸ்லெக்ஸியா குறைபாடு என்பது கற்கும் திறன்கள் மற்றும் மொழியைப் புரிந்துகொண்டு பேசுதல் ஆகியவற்றில் ஏற்படும் ஒரு குறைபாடு தான். டிஸ்லெக்ஸியா பிரச்சனை கொண்ட குழந்தைகளுக்கு வாசித்தல், எழுதுதல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது பேசுதல் ஆகியவற்றில் சிரமங்கள் இருக்கும். ஸ்கொயர் பாண்டா என்பது 2-8 வயது குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையிலான கற்றல் அமைப்பு. இது ஃபோன் மற்றும் டேப்லேட் மூலம் குழந்தைகள் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   
 

கல்வியின் மீது மிகுந்த ஆர்வத்திற்கு முக்கியக் காரணம் அதிகம் கல்வி கற்காமல் எட்டாவது வரை மட்டுமே படித்தது தான் என்று ஸ்கொயர் பாண்டாவை இந்தியாவில் அறிமுகப்படுத்த மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அகாசி கூறினார். எப்போதுமே எந்தவிதமான தேர்வுமின்றி, கல்வியுமின்றி உலகத்தில் சிறந்தவனாக இருந்தபோதிலும் கல்வி மீதான ஆர்வம் அவரிடம் அதிகம் இருந்தது. 
 

அகாசியின் அப்பா டென்னிஸ் விளையாட வேண்டும் என்று கட்டாயம் செய்ததால், படிப்பை நிறுத்திவிட்டு டென்னிஸ் விளையாட்டிற்கு வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த அகாசி. ஒரு காலத்தில் டென்னிஸ் விளையாட்டை விரும்பாமல் இருந்தார் அகாசி. பின்பு டென்னிஸ் விளையாட்டில் நம்பர் 1 இடத்தையும் அடைந்தார் அகாசி. 
 

அகாசியின் சுயசரிதையான “ஓபன்: ஆன் ஆட்டோபியோகிராஃபி” ஜே.ஆர்.மியூஹெண்டரின் உதவியுடன் எழுதப்பட்டு நவம்பர் 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2017-ஆம் ஆண்டு அகாசியின் ஆவணப்படமான “லவ் மீன்ஸ் ஜீரோ” உருவானது. இது அகாசி மற்றும் அவரது பயிற்சியாளர் நிக் பொல்லட்டெரிக்கு இடையேயான உறவை வெளிப்படுத்தியது.
 

ஒரு காலத்தில் டென்னிஸ் விளையாட்டை வெறுத்துவிட்டு, பின்னர் அதே விளையாட்டில் நம்பர் 1 வீரர், தனக்கு கிடைக்காத கல்வியை மற்றவர்களுக்கு கிடைக்கும்பொருட்டு உதவிவரும் சேவை என பல விஷயங்களில் அகாசி எதிர்கால தலைமுறைக்கு ஒரு ரோல் மாடல் வீரராகவும், சமூக சேவகராகவும் உள்ளார். இவரை போன்ற வீரர்களை காண்பது அரிது.

 

 

 


 

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.