Skip to main content

தாய்க்காக மகனின் பாசப்போராட்டம்... உலகைக் கலங்க வைத்த சம்பவம்...

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

palestine son watches his mother from hospital window

 

கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தாய் உயிரிழப்பதற்கு முன்பு அவரை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக மருத்துவமனை ஜன்னலில் ஏறி தனது தாயைப் பார்த்த மகனின் புகைப்படம் இணையத்தில் பலரையும் உருக வைத்துள்ளது. 

 

பாலஸ்தீனத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பெய்ட் அவா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 73 வயதான ரஸ்மி சுவைதி என்பவர் ரத்த புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரை அவரது மகன் ஜிகாத் அல்-சுவைதி என்பவர் கவனித்து வந்துள்ளார். ஆனால், அண்மையில் ரஸ்மிக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், நோய்ப் பரவும் அபாயம் உள்ளதால் அவரது மகனும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

 

உடல்நிலை மோசமடைத்த ரஸ்மி தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கையில் அவரை காணத் துடித்துள்ளார் மகன் ஜிகாத். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் விதிகளின்படி, அவரை அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. இதனையடுத்து தனது தாய் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் பகுதியில் ஏறி அமர்ந்தவாறு தனது தாயைக் கண்ணீருடன் பார்த்துள்ளார் ஜிகாத். கடந்த வியாழக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி ரஸ்மி உயிரிழந்தார். இந்நிலையில், மகன் ஜிகாத் தனது தாயை ஜன்னலில் அமர்ந்தவாறு பார்க்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி பலரையும் கலங்க வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அமெரிக்க ராணுவ வீரருக்காக கலங்கிய ஜி.வி.பிரகாஷ்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
israel palestine issue USA army GV Prakash condolence

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. 

ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போது, பிணையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணையக் கைதிகளில் 31 போர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே  நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

கடந்த 25 ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்காவின் விமானப் படை வீரரான ஆரோன் புஷ்னெல்(25), ‘பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும்..’ என்று முழக்கமிட்டுக்கொண்டே தன்னுடைய உடலில் தீ வைத்துக்கொண்டார். கடைசி வரை தீப்பற்றி எரிந்த நிலையிலும், அந்த இடத்திலிருந்து நகராமல் சரிந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ், ஆரோன் புஷ்னெல் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி. தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல” என குறிப்பிட்டுள்ளார். திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டே தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார் ஜி.வி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.