Skip to main content

முதியவரை மிரட்டி பணம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

villupuram kandamangalam senior citizen incident 

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பலராமன் என்கிற சேட்டு (வயது 65) திருமணத் தரகராக இருந்து வருகிறார். இவர் புதிதாக ஒரு வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு சிமெண்ட் ஓடு வாங்குவதற்காக வீட்டிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று உடல்நிலை சரியில்லாததால் இன்னொரு நாள் வந்து சிமெண்ட் ஓடுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணியபடி வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மீண்டும் தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் ராதாபுரம் அருகே மயக்கம் அதிகரித்துள்ளது. இனியும் வாகனத்தை ஓட்டினால் நிலைமை தடுமாறி கீழே விழுந்து விடுவோம் என்று எண்ணிய பலராமன் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அதன் அருகிலேயே அமர்ந்துள்ளார்.

 

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்கள் பலராமனிடம் விசாரித்துள்ளனர். தனக்கு லேசான மயக்கம் சோர்வு இருப்பதாகவும் தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று சேர்க்குமாறும் கூறியுள்ளார். அந்த இளைஞர்களும் பலராமனை அவரது இருசக்கர வாகனத்திலும் அவர்கள் வந்து இரு சக்கர வாகனத்தில் ஒரு இளைஞன் என இரண்டு வாகனத்தில் பலராமனை அமர வைத்து அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். செல்லும்போது திருக்கனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுமாறு கூறி பணம் கொடுத்துள்ளார். அப்போது அவர் அதிக அளவு பணம் வைத்திருப்பதை இரண்டு இளைஞர்களும் நோட்டமிட்டுள்ளனர்.

 

இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு திருமங்கலம் சுடுகாட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு பலராமனை மிரட்டி அவர் வைத்திருந்த ஒரு லட்சத்து இருபதாயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். மயக்க நிலையில் உள்ள தனக்கு உதவி செய்ய வந்தவர்கள் தன்னிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியவர் பலராமன் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சபாபதி சப் இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பெட்ரோல் பங்க் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதியோருக்கு உதவி செய்வதாக நடித்து அவரிடமிருந்து பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களின் செயல் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.