Skip to main content

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட டன் கணக்கான ரேஷன் அரிசி!! பதுக்கியவர் கைது...

Published on 03/11/2020 | Edited on 04/11/2020

 

Tons of ration rice stored at home ...!

 

 

ஈரோடு வளையக்கார வீதியில் வசிக்கும் குப்பிபாலம் பழனிசாமி என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் சென்றதின் அடிப்படையில் போலீசார் 3ஆம் தேதி மதியம் அந்த வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 50 கிலோ சிப்பமாக இரண்டரை டன் ரேஷன் அரிசி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

வீட்டில் இருந்த பழனிச்சாமி மனைவி ஜெயந்தி (49) என்பவரை போலீசார் கைது செய்ததோடு ரேஷன் அரிசி கடத்தலுக்கு அவர் பயன்படுத்திய ஒரு ஸ்கூட்டி, மற்றும் இரண்டரை டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றி அவற்றை பறிமுதல் செய்தனர்.

 

போலீஸ் விசாரணையில், ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்காக வளையக்கார வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி அதை ஜெயந்தி  மூட்டையாக கட்டி வைத்திருக்கிறார். இந்த அரிசிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வந்து முருகன் பெற்றுக் கொள்வாராம். அந்த முருகன் 4ஆம் தேதி இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்து செல்ல இருந்த நிலையில் அரிசி மூட்டைகள் பிடிபட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை பற்றி தகவல் தெரிந்ததும் முருகன் தலைமறைவாகி விட்டார்.

 

ஈரோடு உணவுபொருட்கள் கடத்தல் தடுப்பு நுண் அறிவு பிரிவு போலீசாரிடம்  ரேஷன் அரிசி மூட்டைகள், ஸ்கூட்டி ஆகியவற்றை ஈரோடு டவுன் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அந்தப் பெண் ஜெயந்தியும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் தொடர்பாக அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள்.

 

ஈரோட்டில் உள்ள ரேசன் கடைகளில் பெறப்படும் இந்த ரேசன் அரிசி களை மொத்தமாக அரிசி மில்லுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார் முருகன் என்பவர் ஒரு மாதத்தில் 10 டன்னுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட முருகன் ஆளுங்கட்சி பிரமுகருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என போலீசார் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அரிசி மூட்டைகளுடன் லாரியை கடத்திய கும்பல் கைது

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

Gang arrested for hijacking lorry with bags of rice

 

விழுப்புரம் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்தவர் தனக்கோடி என்பவரின் மகன் வெங்கடேசன். இவர் தமிழ்நாடு வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிக்கு தனக்கு சொந்தமான லாரியை ஒப்பந்த அடிப்படையில் அனுப்பியுள்ளார். அந்த லாரியில் டிரைவராக பணி செய்து வருபவர் சையது சுல் பிக்கர். இவர் நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் ரயில்வே நிலையத்திற்கு ரயில் மூலம் வந்த ரேஷன் அரிசி 600 மூட்டைகளை தனது லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று அதை திண்டிவனம் சந்தை மேட்டுப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இறக்குவதற்காக கொண்டு வந்து நிறுத்தினார்.

 

இரவு நேரம் என்பதால் இறக்குவதற்கு ஆட்கள் இல்லை அதனால் மறுங்கால் காலை இறக்கி விடலாம் என்று லாரியை சேமிப்பு கிடங்கு முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவர் மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது அரிசி மூட்டைகளுடன் லாரி மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் இது குறித்து லாரி முதலாளி வெங்கடேசனுக்கு தகவலளித்தார். அவர் லாரியை கண்டுபிடித்து தருமாறு திண்டிவனம் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட அரிசி லாரியை கண்டுபிடிப்பதற்காக தீவிரமாக தேடி வந்தனர்.

 

அதன் பொருட்டு போலீசார் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் எனும் கருவி மூலம் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன் மூலம் கடத்தப்பட்ட லாரி பெரிய பேரம்பட்டு பகுதியில் நிற்பது கண்டறியப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது சேற்றில் லாரி சிக்கி நின்றிருந்தது. அதில் இருந்த 600 அரிசி மூட்டைகளில் 520 மூட்டைகள் காணவில்லை. 80 மூட்டைகள் மட்டுமே அதில் இருந்தன. இதன் மூலம் கடத்தப்பட்ட அரிசி லாரி சேற்றில் சிக்கியதும் வேறு ஒரு லாரியை கொண்டு வந்து அரிசி மூட்டையை அதில் மாற்றி ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர். நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அரிசி கடத்திச் செல்லப்பட்ட லாரி கர்நாடக மாநில சூளகிரி பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அரிசி மூட்டையுடன் கடத்தப்பட்ட லாரியை கண்டுபிடித்து கைப்பற்றினர். லாரியை கடத்திச் சென்றதாக விக்கிரவாண்டி அடுத்துள்ள அய்யனாம்பாளையம் இந்திய ராஜ் அவரது கூட்டாளிகள் கந்தன், பொன்னுசாமி, விழுப்புரம், வண்டி மேடு பகுதியைச் சேர்ந்த சையது முஸ்தபா, இவரது சகோதரர் அபுதாஹிர், வேலூர் மாவட்டம் சரளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராம்கி ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஒன்று சேர்ந்து அரிசி மூட்டையுடன் லாரியை கடத்திச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட லாரி, 7 செல்போன், ஒரு கார் வாங்கியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த திண்டிவனம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆங்காங்கே ரேஷன் அரிசி சில்லறை முறையில் முட்டைகளை கடத்தப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது 600 மூட்டைகளுடன் லாரியை கடத்திய மெகா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.