Skip to main content

"தொண்டர் முதல்வரான ஒரே கட்சி அ.தி.மு.க."- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு... 

Published on 27/12/2020 | Edited on 27/12/2020
tn assembly election 2021 election campaign cm palanisamy speech

 

தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

 

tn assembly election 2021 election campaign cm palanisamy speech

 

பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சாதனைப் படைத்து வருகிறது. அ.தி.மு.க.வை, ஆட்சியை விமர்சிப்பவர்கள் தங்கள் வீட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்.ஜி.ஆர். உள்ளது. சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தன; அந்த முயற்சி தவிடுபொடியாக்கப்பட்டது.  பிரிந்த பின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அ.தி.மு.க.தான். இன்று நான் முதல்வராக இருக்கலாம்; ஓ.பி.எஸ். முதல்வராக இருக்கலாம்; நாளை தொண்டர்களில் ஒருவர் முதல்வராகலாம். அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துப் போவார்கள்.

tn assembly election 2021 election campaign cm palanisamy speech

தமிழ் மண்ணை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி அ.தி.மு.க. மட்டுமே. சாதாரண தொண்டனுக்கும் கதவை தட்டி பதவி வழங்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளன. சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3,000 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலை மாறி தற்போது 19 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியது. குடிமராமத்து பணிகள் செய்துள்ளதால் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

tn assembly election 2021 election campaign cm palanisamy speech

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அப்போது மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் செய்தது என்ன? புயல், மழை ஏற்பட்டபோது நாம் புயலை விட வேகமாக செயல்பட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். கரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் மட்டுமே. நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.