தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பெட்டிக் கடைக்காரர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்தவர் அழகுராஜா. இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்த நிலையில், நேற்று (20/02/2020) நண்பகல் கழுகுமலை மெயின் வீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், மகேந்திரன் என்பவர் கழுகுமலை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அழகுராஜா-மகேந்திரன் ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இருவரும் கணவனை இழந்த பெண்ணுடன் 'தொடர்பில்' இருந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 2 பேருக்கும் 15 நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து அழகுராஜாவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால், கோபத்தில் இருந்த மகேந்திரன் கழுகுமலைக்கு சாமான்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்தபோது அழகுராஜாவை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மேலும் கொலையான அழகுராஜா, சில தினங்களுக்கு முன்னர் மகேந்திரனை திட்டியதோடு "இனிமேல் அந்த பெண்ணை தேடி ஊருக்குள் வந்தால், நடக்கிற சம்பவம் வேறாக இருக்கும்" என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஊர்க்காரர்கள் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியதும் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
தென் மாவட்டங்களில் இந்த 2 சமூகத்திற்கும் ஆகாது என்பதால், மோதலை தடுக்கும் பொருட்டு முக்கிய கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Show comments