Skip to main content

வாழை தோப்பில் திருட்டு மணல் குவாரிகள்!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
வாழை தோப்பில் திருட்டு மணல் குவாரிகள்!



காவிரி படுகைகளில் மணல் அள்ளுவதை நீதிமன்றம் தடை விதித்து முறைகேடுகள் நடைபெற்றுயிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுயிருக்கும் நிலையில் காவிரி படுகைகளில் ஆங்காங்கே திருட்டு மணல் கும்பல் அதிகாரிகளை சரிகட்டி மணல் கொள்ளையில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த சீனிவாசநல்லூர் பகுதியில் வாழைத்தோப்பில் திருட்டுதனமாக செயல்பட்ட மணல்குவாரியிலிருந்து 15 லாரிகள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முசிறி அருகில் தொட்டியத்தை அடுத்த சீனிவாசநல்லூர் பதனித்தோப்பு பகுதியில் உள்ள காவிரிக்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் மாட்டுவண்டிகள் மூலம் ஆற்று மணலை திருடி சென்று சேமித்துள்ளனர். பின்னர் சேமிக்கப்பட்ட மணலை பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் திருட்டுதனமாக லாரிகளுக்கு அதிக விலைக்கு மணல் ஏற்றி விற்பனை நடைபெற்று வந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் செய்தனர்.

புகார் வந்ததை அடுத்து முசிறி ஆர்.டி.ஓ ராஜ்குமார், தொட்டியம் தாசில்தார் கிருஷ்ணக்குமார், போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோர் சீனிவாசன் நகர் பகுதிக்கு ரகசியமா ஆய்வு செய்தனர். அப்போது அங்கே மணல் ஏற்றிக் கொண்டிருந்த 15 லாரிகளையும், 2 பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்காக வாழைத்தோட்டத்தின் பட்டா உரிமையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் பேசும் போது.. இரவுநேரங்களிலும், அதிகாலை நேரத்திலும் மாட்டுவண்டிகள் மூலம் காவிரி ஆற்றில் திருடப்படும் மணல் பதனித்தோப்பு பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இரவு நேரத்தில் திருட்டு தனமாக மணல் லாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்துள்ளதால் கட்டிடவேலை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டிட வேலை தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக பணவசதியுடையவர்கள் என்ன விலை கொடுத்தாவது மணலை வாங்குகின்றனர். இதனால் ஆற்று மணலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வாழைத்தோப்பில் திருட்டுதனமாக குவாரி அமைத்து மணல் கொள்ளை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

மணல் கொள்ளை குறித்து ஆய்வு நடந்து வரும் நிலையில் இப்படி பட்டவர்த்தமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதும் அதிகாரிகளும் துணையாக இருப்பது தான் வேதனையான விஷயம்.

- ஜெ.டி.ஆர்


சார்ந்த செய்திகள்