ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்கள் நலத் திட்டங்கள், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பது எனத் தொடர்ந்து தமிழகம் முழுக்க சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி முடிவுற்ற சில நலத் திட்டப்பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாகவும் திறந்துவைத்து வருகிறார். அந்தவகையில், கடந்த வாரம் கரூர், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சென்றிருந்தார். தொடர்ந்து கடந்த 14ம் தேதி கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 15, 16 என இரு நாட்கள் கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற நகரங்களில் நடந்த அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று, தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் ரூ.104.77 கோடி செலவில், 18 கோயில்களில் புதியதாக திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி, விருந்து மண்டபம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட 25 கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக இந்த கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு ஆகியோர் கலந்துகொண்டனர்.