தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படி, ஏசி வசதியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூபாய் 120 ம், மாநகராட்சி, நகராட்சிப், பேரூராட்சி பகுதிகளில் பகுதிகளில் தியேட்டர்களில் ரூபாய். 100 ம் , ஊராட்சிப் பகுதிகளில் ரூபாய் 75/- மட்டுமே, வரிகள் தவிர்த்து, அதிகபட்சமாக டிக்கெட் கட்டணமாக வசூல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் பொழுது அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் திரையரங்குகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அந்த சுற்றறிக்கையையும் மீறி திரையரங்குகளில் பிகில், கைதி படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. அப்படி வந்த ஒரு புகாரையடுத்து ஆய்வுக்கு சென்று திரைப்படம் பார்த்தவர்களிடம் விசாரித்தபோது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான ரூபாய் 80 விட கூடுதலாக, முதல் வகுப்பிற்கு 150 ரூபாயும், பால்கனி 200 ரூபாயும் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அதிகமாக வசூல் செய்த தொகை ரூ. 33,830/- ஐ திரைப்படம் பார்த்த 589 பார்வையாளர்களுக்கு திரும்ப வழங்க சார் ஆட்சியர் உத்தரவிட்டார். திரைப்படம் முடிந்து வெளியே வந்த பார்வையாளர்களுக்கு கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகையை தியேட்டர் நிர்வாகம் திரும்ப வழங்கியது.
இதுப்பற்றி சார் ஆட்சியர் இளம்பகவத் பேசுகையில், அரசு உத்தரவை மீறி திரையரங்க நிர்வாகம் கட்டணம் வசூலித்துள்ளது. இதுப்பற்றிய அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.