Skip to main content

வேலூர் கூட்டு வன்கொடுமை! சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Vellore  case Five arrested, including minor

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, மார்ச் 20ஆம் தேதி இரவு 2 வாலிபர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரிடம் எதுக்கு சண்டை என விசாரணை செய்தபோது வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு உருவாகி இருவரும் தாக்கிக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து முழு போதையில் இருந்த இரண்டு பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற போலீஸார், தீவிர விசாரணை நடத்தியதில், மார்ச் 16ஆம் தேதி இரவு, தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்ததை கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். 

 

இதுகுறித்து காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணா வெளியிடுள்ள அறிக்கையில்; ‘ஆன்லைன் வழியாக வந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16.03.2022ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்துவிட்டு நள்ளிரவு 01.00 மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும், அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும், தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றதாகவும், அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள், பணம் ரூ.40,000 மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும், மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதில் சிறார் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் காட்பாடி திருவலம் சாலையில் உள்ள திரையரங்கில் கடந்த 16ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இரவு காட்சி முடிந்து இரவு 12.30 மணிக்கு மேல் 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர்.  இவர்களை நோட்டமிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம் எங்க செல்ல வேண்டும் என கேட்டு இது சேர் ஆட்டோ தான் வாங்க என கூறியுள்ளனர். ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். ஏற்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ஆட்டோ ஓட்டுநர், இவ்வழியில் சாலையில் பராமரிப்பு வேலை நடக்கிறது. அதனால் சுற்றி போகிறோம் என கூறினார்.

 

சர்வீஸ் சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றது. இதனால் பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும். அவர்களிடமிருந்து செல்போன்கள், ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறவில்லை என்பது தெரியவந்தது. 


இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்து எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்