Skip to main content

மாணவிகளை தவறாக படம் எடுத்த காமுகன்... கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்... போராட்டம் நடத்த தயாராகும் மாணவிகள்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

கழிவறை இல்லாத அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்குவதை படம் எடுக்க முயன்ற காமுகனை மாணவிகளே பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் ஏனோ புகார் கொடுக்க மறுத்து வருகிறது. அதனால் மாணவிகளை இணைத்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தவும் தயாராகிவிட்டனர்.

 

pudukottai college student planing to protest

 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ளது அரசு மகளிர் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படிக்கிறார்கள். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என மாணவிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அதைப் பயன்படுத்த முடியாமல் மாணவிகள் தவித்து வருகின்றனர்.  வேறு வழியின்றி கல்லூரி வளாத்தில் உள்ள மரத்தடியை திறந்தவெளியை கழிப்பறையாக மாணவிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கல்லூரி சுற்றுச்சுவரில் மறைந்து நின்று ஒரு காமுகன் மாணவிகள் ஒதுங்கியதை தனது செல்போனில் படமெடுத்துள்ளான். இதைப்பார்த்த மாணவிகள் அதிர்ச்சியில் அலறி சத்தம் போட்டுள்ளனர். மேலும், அந்த காமுகனைப் பிடித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதே நேரத்தில், கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் கூறும்போது, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை முற்றிலுமாக சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது.  மேலும், மாணவிகள் பயன்படுத்திய நாப்கின்களை எரியூட்டும் எந்திரமும் பழுதாகி பல மாதங்கள் ஆகின்றன. இதனால், மாணவிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்துள்ளோம். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து 3 நாட்களுக்கு முன்பு நக்கீரன் இணையத்தில் செய்தியும் வெளியானது.

இதனைத் தொடர்ந்துதான் மாணவிகளுக்கு இத்தகைய அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகை கீழ்த்தரமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அந்த காமுகனை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். உடனடியாக மாணவிகள் பயன்படுத்துவதற்கு புதிய கழிப்பறையைக் கட்டித்தர வேண்டும். நாப்கின் எரியூட்டும் எந்திரத்தை உடனடியாக பழுதுநீக்கி மாணவிகள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.