Skip to main content

முட்டுக்கட்டை போடும் தனியார் பள்ளி நிர்வாகம்... வேதனையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்...

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப்பள்ளிகளுக்கு ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புகிறதோ இல்லையே  வழக்கம் போல ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வை அறிவித்து நடத்தி வருகிறது. 

 

2019 ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28 ந் தேதி அறிவித்தது. இணையவழி விண்ணப்பம் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தேர்வு நடக்கும் தேதியை திடீரென இன்று அறிவித்துள்ளது. அதாவது ஜூன் 8 ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள் 1 க்கும், 9 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள் 2 க்கான தேர்வுளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

tet

 

இந்த நிலையில்தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் படிக்காமல் எப்படி தேர்வு எழுதுவது என்று நொந்து வருகிறார்கள்.

 

தனியார்பள்ளி ஆசிரியர்கள் கூறுவதோ..

 

அரசுப்பள்ளி ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவு எங்களுக்கும் உண்டு. தேர்வு வாரியம் தேர்வு எப்பொழுது அறிவிக்கும் என்று காத்திருந்தோம். இந்நிலையில் பிப்ரவரியில்  தேர்வு அறிவித்தார்கள் விண்ணப்பித்தோம். அந்தவேளையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியது. அதற்காக நாங்கள் படிக்க முடியவில்லை. மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விட்டாச்சு. அப்பறமாவது படிக்கலாமா என்றால் நாங்கள் வேலை செய்யும் தனியார்பள்ளி நிர்வாகங்கள் எங்களை படிக்க விடவில்லை.

 

 

அதாவது கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு விடுமுறை ஆனா எங்களுக்கு ஊர் ஊராக போய் வீட்டுக்கு வீடு சென்று பள்ளிகளின் விளம்பர துண்டறிக்கைகளை கொடுத்து குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேருங்கள் என்று பெற்றோர்களையும், மாணவர்களையும் மூளை சலவை செய்யும் பணி கொடுத்திருக்கிறார்கள்.

 

 

வழக்கம் போல பள்ளிக்கு போய் விளம்பர துண்டறிககைகளை எடுத்துக்கொண்டு பள்ளி வேனில் ஏறி ஊர் ஊராக போய் இறக்கி விடுவாங்க. வீடு வீடாக நடந்துட்டு மாலை வீட்டுக்கு வரனும். அப்பறம் எப்படி நாங்க தகுதி தேர்வுக்கு படிக்க முடியும். தனியார் பள்ளி நிர்வாகங்கள் எங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டு தடுக்கிறார்கள் என்றனர் வேதனையாக.

 

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு கூடாது என்று சொன்ன அரசாங்கம் தனியார் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களை பிடிக்க ஊர் ஊராக செல்வதை தடுக்க ஒரு உத்தரவு போட்டால் இன்னும் 20 நாளிலாவது கொஞ்சம் படித்து தேர்வுக்கு தயாராவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.