Skip to main content

இலங்கை அகதி மீது போலீசார் சரமாரி தாக்குதல்! முகாமில் தங்கிய மர்ம நபர்கள் யார்?

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
sara

 

சேலம் அருகே, இலங்கை அகதியை போலீசார் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. ஈழத்தில், கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் போர் மூண்டதால், அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி தமிழ்நாட்டிற்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். 


இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர், நாகியம்பட்டி முகாமிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கியூ பிராஞ்ச் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த முகாமில் அகதிகளைத் தவிர வெளிநபர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நாகியம்பட்டி முகாமில் வசிக்கும் ஜான் என்பவரின் வீட்டில் தங்கி உள்ளனர். அவர்கள் தங்கியிருப்பது தொடர்பாக முகாமைச் சேர்ந்த சிமியோன் (68) என்பவருக்கும், சுபாஷ்கரன் (58) என்பவருக்கும் நேற்று முன்தினம் (அக்டோபர் 9, 2018) தகராறு ஏற்பட்டது. நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து சிமியோன் அளித்த தகவலின்பேரில் தம்மம்பட்டி போலீசார் அந்த முகாமுக்கு விரைந்தனர். அப்போது போலீசாரிடமும் சுபாஷ்கரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த போலீசார், திடீரென்று சுபாஷ்கரனை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். 


பலத்த காயம் அடைந்த சுபாஷ்கரன், இன்று மதியம் 2 மணியளவில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருடைய மூக்கு, நெற்றி, முதுகு பகுதிகளில் காயங்கள் கன்றிப்போய் இருந்தன. 


இதுபற்றி நாம் சுபாஷ்கரனிடம் பேசினோம்.


''கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த இரண்டு பேர், நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள நாகராஜா என்கிற ஜான் வீட்டில் மூன்று மாதமாக தங்கி உள்ளனர். எங்கள் முகாமில் வசிக்கும் சிமியோன் அங்கிள் என்பவர், கடலூர் வாலிபர்கள் இருவரையும் பார்த்து, 'நீங்கள் என்ன தீவிரவாதிகளா? நீங்கள் யார்? ஏதோ பெண்கள் விவகாரத்தில் தப்பு செய்துட்டு இங்கே வந்து ஒளிந்திருக்கிறீர்கள்' என்று சொன்னார்.


இதையறிந்த நான் சிமியோன் அங்கிளிடம் சென்று, நீங்கள் ஏன் அவர்களை மிரட்டுகிறீர்கள். போலீசுக்கு தகவல் சொன்னால் அவர்கள் வந்து பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்னேன். உடனே அவர், நீ யார் அதைக் கேட்க? என்று சொல்லி என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். பதிலுக்கு நானும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினேன்.


இதுபற்றி தகவல் தெரிந்த தம்மம்பட்டி போலீசார் அங்கே வந்தனர். அவர்கள் வந்த வேகத்தில் என்னிடம் என்ன ஏது என்றுகூட விசாரிக்காமலேயே சரமாரியாக அடிக்கத் தொடங்கி விட்டனர். ஃபைபர் லத்தியால் அடித்தனர். அப்போது நான் அணிந்திருந்த கைலி கழன்று கீழே விழுந்தது. பலர் முன்னிலையில், கைலி அவிழ்ந்து, நான் ஜட்டியோடு இருக்கும்போதும் போலீசார் என்னை அடித்தனர். இந்த சம்பவம் அக்டோபர் 10ம் தேதி காலை 11 மணியளவில் நடந்தது.  பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றும் அடித்தனர்.


மூன்று போலீசார் என்னை தாக்கினர். அப்போது அவர்கள், 'ஏன்டா பொறம்போக்கு நாயே. எங்களிடம் பிச்சை எடுக்கற அகதி நாயே...அடிச்சே சாகடிச்சிடுவோம்,' என்று சொல்லி அடித்தனர். பின்னர் சிமியோன் அங்கிள், 'நாங்கள் ஒற்றுமையாக செல்கிறோம்' என்று எழுதிக் கொடுத்தார். அதில் என்னிடமும் போலீசார் கையெழுத்து வாங்கிக்கொண்டு நேற்று இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். போலீசார் தாக்கியதில் என்னால் மூச்செடுக்க முடியவில்லை. நெஞ்சுவலியும் வந்தது. அதன்பிறகு என் நண்பர் சோலை செல்வம் என்பவர், என்னை இன்று ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்,'' என்றார்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் செல்வம், ராஜலிங்கம், சசிகுமார் ஆகியோரும் சுபாஷ்கரனை மருத்துவமனையில் சேர்த்ததில் முக்கிய பங்காற்றியதாகச் சொன்னார்கள். அகதியை தாக்கிய போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் த.வா.க. மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம்.


இதுபற்றி நாம் நாகியம்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த சிமியோன், முகாம் தலைவர் ஜோதி ஆகியோரிடமும் விசாரித்தோம். 


சிமியோன் கூறுகையில், ''ஜான் வீட்டில் கடலூரைச் சேர்ந்த இரண்டு பொடியன்கள் தங்கியிருக்கின்றனர். உண்மையில் அவர்கள் பெயர்கள்கூட தெரியாது. முகாமில் வெளி ஆள்கள் தங்கக்கூடாது என்று ஏற்கனவே கியூ பிராஞ்ச் போலீசாரிடம் நானும், முகாம் தலைவர் ஜோதியும் புகார் அளித்திருக்கிறோம்.


அதனால் நேற்று முன்தினம் அந்த இரண்டு பொடியன்களையும் முகாமை விட்டு வெளியேறும்படி சொன்னோம். ஊருக்குச் செல்ல காசு இல்லாததால் முகாம் ஆள்களுடன் பெயின்ட் அடிக்கும் வேலைக்கு சில நாள்கள் சென்றனர். இந்த நிலையில்தான், சுபாஷ்கரன் குடிபோதையில் வந்து, நான்தான் அவர்களை தங்க வைத்திருக்கிறேன் என்று கூறி எங்களிடம் தகராறு செய்தார். விசாரணைக்கு வந்த போலீசாரிடமும் தகராறு செய்ததார். 


பிறகு, நேற்று இரவே போலீஸ் நிலையத்தில் இருந்து அவரை விட்டுவிடும்படி சமாதான கடிதம் எழுதிக்கொடுத்தோம். திடீரென்று இன்று அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை,'' என்றார். 


இதுகுறித்து ஆத்தூர் டிஎஸ்பி பொன்கார்த்திக் குமாரிடம் கேட்டபோது, ''சுபாஷ்கரன் என்பவர் முகாமில் ஒருவரை அடிக்கப் போனார். அதுகுறித்து விசாரிப்பதற்காக தம்மம்பட்டி போலீசார் அ-ழைத்துச்சென்றனர். விஷயம் அவ்வளவுதான். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக்கட்சியினரின் தூண்டுதலால் சுபாஷ்கரன் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்,'' என்று முடித்துக்கொண்டார்.


எது எப்படியோ, தமிழகத்தை நம்பி வந்த அகதி ஒருவர் தாக்கப்பட்டதாக புகார் சொல்கிறார். அதுகுறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டிய காவல்துறையினரே பட்டும்படாமல் பேசுவது தகுமா?

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.