Skip to main content

அதிரடி காட்டிய போலீஸ்; மாமூல் ரவுடி கலைக்கு மாவுக்கட்டு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

The police showed action; Mamool Rowdy is the dough for art

 

வடசென்னை பகுதியில் கடைகளில் மாமூல் கேட்டு பிரச்சனை செய்து வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்த நிலையில், கலைச்செல்வன் என்ற ரவுடிக்கு காலில் மாவுக்கட்டு போட்டு வீடியோ எடுத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

 

கலை என்கின்ற கலைச்செல்வன் தலைமையிலான ரவுடி கும்பல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வியாசர்பாடியில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த அந்த கும்பல் அந்த பகுதியில் நின்றிருந்த டாட்டா ஏஸ் வாகனம், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்த கும்பல் வியாசர்பாடி மட்டுமல்லாது அண்ணா நகர், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பல இடங்களில் மாமூல் கேட்டு வியாபாரிகளை அச்சுறுத்தி வந்தது தெரியவந்தது.

 

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வில்லிவாக்கம் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறை சென்று வந்த இரண்டு பேர் இதுபோன்று மாமூல் கேட்டு மிரட்டல் விடுக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கும்பலுக்கு தலைவனாக கலை என்கின்ற கலைச்செல்வன் இருந்து வந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.

 

மற்ற இருவர் போலீசாரின் வலையில் சிக்கிவிட்ட நிலையில், கலைச்செல்வனை பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடி பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி கலையை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்பொழுது ரவுடி கலை தப்பிக்க முயன்று மாடியில் இருந்து குதித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு போலீசார் ரவுடி கலையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கையிலும் காலிலும் மாவுக்கட்டு போட்டு விட்டனர். தான் செய்தது தவறு என மன்னிப்பு கேட்கும்படி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள காவல்துறையினர், ரவுடி கலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.