Skip to main content

46 வயது சிவராஜூ குரூப் 4 தேர்வில் முதலிடமா..?

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் என புகார்கள் எழுந்த நிலையில், "குரூப்-4 தேர்வில் எழுந்துள்ள புகார் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும்" என சட்டப்பேரவையில் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக அறிவித்தார். அதே வேளையில், குரூப் 4- க்கான தகுதியாளரின் அதிகபட்ச வயதே 40 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 46 வயது சிவராஜூ குரூப் 4 தேர்வில் எப்படி முதலிடம் பிடித்தார்..? என்ற குட்டு வெளியாகியுள்ளது.
 

tnpsc group 4 exam issues ramanathapuram district exam centre

 

தமிழ்நாடு அரசின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டி தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியுடைய நபர்களை தேர்ந்தெடுத்து அரசு பணிக்கு அனுப்புவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணி. நகராட்சி ஆணையர், வருவாய்க் கோட்டாட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதன்மைப் பணிகளுக்கான தேர்வினை நடத்துவது தொடங்கி கடை நிலை உதவியாளர் வரை பல்வேறு பிரிவுகளாக தேர்வினை நடத்தி வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய குரூப் 4 பிரிவு மூலம் வி.ஏ.ஒ- 397, ஜூனியர் அசிஸ்டெண்ட் 2688, பில் கலெக்டர் கிரேடு1- 34, பீல்டு சர்வேயர் 509, டிராப்ட்ஸ்மேன் 74, டைப்பிஸ்ட்- 1901 மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்- 784 உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வினை அறிவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 301 தாலுகா மையங்களிலுள்ள 5575 தேர்வு மையங்களில் சுமார் 17 லட்சம் நபர்கள் தேர்வினை எழுதினர். சமீபத்தில் தேர்ச்சிப் பெற்றோர் விபரம் அறிவிக்கப்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளனர்.

 

இதில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் (1606) மற்றும் கீழக்கரை (1608) ஆகிய மையங்களில் தேர்வெழுதிய 40- க்கும் மேற்பட்டோர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள் மதிப்பெண்ணை பெற்றதும், இன வாரியாக முதல் 50 இடங்களை பெற்றதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் ஏன் இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.? எவ்வாறு இந்த இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றனர்.?.
 

VAO



இந்த மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மாநில அளவில் இடம் பெற்றவர்களில் அநேகமான நபர்கள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தொலை தூரத்திலிருக்கும் தேர்வர்கள் இந்த தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதிய காரணமென்ன..? என்ற பல சந்தேகங்கள் எழுந்த நிலையில், "மேற்கூறிய 40 தேர்வர்களும் சென்னை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள். இந்த மையத்தில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒட்டுமொத்த தரவரிசை அடிப்படையில் முதல் 1000 இடங்களில் 40 தேர்வர்களும், முதல் 100 இடங்களில் 35 தேர்வர்களும் உள்ளனர்." என ஒப்புக்கொண்டதோடு," விசாரணை நடைப்பெற்று உண்மை நிலை அறிவிக்கப்படும்" என்றது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

 

இது இப்படியிருக்க, சர்ச்சைக்குரிய இதே குருப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் மேலக்கண்ணனூரை சேர்ந்த சிவராஜூவின் வயது 46 (பிற்படுத்தப்பட்ட வகுப்பு) என தகவல் வெளியாக, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு அதிகபட்ச வயது 30 ஆகவும், ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு 3, டைப்பிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், பீல்டு சர்வேயர், பில் கலெக்டர் கிரேடு 1, ஜூனியர் அசிஸ்டெண்ட் மற்றும் ஜூனியர் அசிஸ்டெண்ட்பணியிடங்களுக்கு 32 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டும், ஒரு சிலருக்கு வயது வரம்பில் தளர்வும் வரையறுக்கப்பட்ட நிலையில் 46 வயது நபரை தேர்வெழுத அனுமதித்து எப்படி..? அவருக்கு உடந்தையாக இருந்தது யார்..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.