ADVERTISEMENT

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

12:00 PM Jul 08, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனிமைப் படுத்துதல் என்ற பெயரில் அநியாயமாக ஒரு உயிரைப் பறித்துள்ளது தமிழக அரசு. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நிதிநத்தம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தரவேல். இவர் சிங்கப்பூரில் பணிசெய்து வந்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக வேலை இல்லாமல் சிங்கப்பூரில் இருந்தவரை ஊருக்கு வந்துவிடுமாறு அவரது மனைவி சந்திரா அழைத்துள்ளார். அதையடுத்து தமிழகம் வருவதற்கு இணையவழி மூலம் சுந்தரவேல் விண்ணப்பித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் அரசு அவருக்குக் கரோனா பரிசோதனை செய்துள்ளது.

அதில் அவருக்கு நோய்தொற்று இல்லை எனத் தெரியவந்ததை அடுத்து அவரை தமிழகம் அனுப்பிவைத்தது. அதன்படி கடந்த 25.06.2020 அன்று விடியற்காலை சென்னை வந்து சேர்ந்துள்ளார் சுந்தரவேல்.


விமான நிலையத்திலேயே சுந்தரவேலுக்கு தமிழக மருத்துவக் குழுவினர் கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அந்தப் பரிசோதனையிலும் அவருக்கு நோய்த் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இருந்தும் 14 நாட்கள் தனிமைப் படுத்துதலுக்காக விமானத்தில் பயனம் செய்து வந்த 40க்கும் மேற்ப்பட்டவர்களை தேனாம்பேட்டையில் உள்ள 'ஹயாத்' சொகுசு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தனித் தனி அறைகளில் தனிமைப்படுத்தி தங்கவைத்தனர். அதில் சுந்தரவேலும் ஒருவர்.

சிங்கப்பூரில் இருந்து சுந்தரவேல் கிளம்பும்போது மனைவியுடன் வீடியோ கால் பேசியுள்ளார். சென்னை வந்ததும் தொடர்பு கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் மனைவியைத் தொடர்பு கொள்ளவில்லை. இடையில் சுந்தரவேல் மனைவி சந்திரா தனது கனவரிடம் தொடர்புகொண்டு பேசுவதற்கு முயற்சி செய்துள்ளார், முடியவில்லை.

காரணம் சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு இங்கு பயன்படுத்த முடியவில்லை. கடும் முயற்சிக்குப் பிறகு சந்திரா இணையத்தளம் மூலம் கணவர் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஹயாத் ஓட்டலின் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து தொடர்பு கொண்டார். தனது கணவர் குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு ஓட்டல் நிர்வாகம் சரியாக பதில் கூறாமல் அலைகழித்துவிட்டு, ஒருவழியாக அவரது கணவர் அறையில் சேரில் அமர்ந்தபடி இறந்துபோனதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு கதறி அழுதுள்ளார் சந்திரா. அதன்பிறகு சந்திரா பட்ட துண்பங்கள் துயரங்கள் பற்றி அவரே நம்மிடம் கூறினார்.

ஓட்டல் நிர்வாகம் விளக்கமான பதிலைக் கூறவில்லை. இறந்துபோன தகவல் கிடைத்த பிறகு பல்வேறு சிரமங்களுக்கு இடையே சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தோம். அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளும் என்ன நடந்தது என்பதை முழுமையாகக் கூறவில்லை. ஓட்டலுக்கும் காவல் நிலையத்திற்கும் அலைந்து திரிந்து விசாரித்ததில் சிங்கப்பூரில் இருந்து வந்த மறுநாள் எனது கணவர் வயிறு வலிப்பதாகக் கூறியதாகவும் அதற்காக மருத்துவர் வந்து ஊசிபோட்டு மாத்திரை கொடுத்துவிட்டுச் சென்றதாகவும் தெரிந்து கொண்டேன்.

அந்த சொகுசு ஓட்டலில் மிகப் பெரிய அறையில் எனது கணவர் தங்கவைக்கப்பட்டுள்ளார். இவருக்கான சாப்பாடு உணவுகளை அவ்வப்போது அறைக்கு வெளியே இருந்து சிறைச்சாலை கம்பிகள் வழியே கைதிகளுக்கு தள்ளிவிடுவதுபோல் சாப்பாட்டைத் தள்ளிவிட்டு விடுவார்கள். உள்ளே இருப்பவர் எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை ஓட்டல் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

வயிறு வலி என்று சொன்னவர் அதன்பிறகு எப்படி இருக்கிறார் என்பதை அரசு மருத்தவர்களும் சென்று பார்க்கவில்லை. இவர்கள் அளித்த சாப்பாட்டை அவர் சாப்பிடாமல் அப்படியே கிடந்துள்ளது. அடுத்தடுத்த வேலைகளுக்கு உணவுகொண்டு போணவர்கள் சாப்பாடு அப்படியே உள்ளதைக் கண்டு ஓட்டல் நிர்வாகத்திடம் சொல்ல அவர்கள் அறையைப் பார்த்தபோது சேரில் உட்கார்ந்தபடி இறந்துபோனதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், தேனாம்பேட்டை போலீசார் ஓட்டலில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் நாங்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்துகிடந்ததாகக் கூறுகின்றனர். ஓட்டல் நிர்வாகமும் காவல்துறையும் முன்னுகுக்குப் பின் முரனாகக் கூறுகின்றனர்.

இதனால் என் கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. மேலும் என் கணவர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்த பெட்டியை உடைத்து அதில் உள்ள பணம் தங்க நகைகளை எடுத்துள்ளனர் என்று கருதுகிறேன். காரணம் எங்கள் அனுமதி இல்லாமலேயே பெட்டியை உடைத்து திறந்துள்ளனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, "ஓட்டல் அறை வாடகை 17,000 ரூபாய் செலுத்தவேண்டும் அதில் கூட 16,000 மட்டுமே உள்ளது வேறுபணம் எதுவும் இல்லை என்று உன் கணவர் கூறி அதை மட்டுமே செலுத்தியுள்ளார்" என்கிறது போலீஸ். இது கூட முரண்பாடாகவே உள்ளது.

காரணம் சிங்கப்பூரில் இருந்து கிளம்புவதற்கு முன்பு என்கணவர் விமான பயணக் கட்டணத்துடன் சென்னையில் வந்து தனிமைப் படுத்துவதற்காக தங்கவைக்கப்படும் ஓட்டல் அறைக்கான வாடகையையும் சேர்த்தே செலுத்திவிட்டதாகக் கூறினார். அப்படி இருக்கும்போது இங்கு வந்து பணம் கட்டியதாகச் சொல்லப்படுவது புதிராக உள்ளது.

இவ்வளவு சிரமங்களுக்கு இடையே எனது கணவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு காவல்துறையிடம் கேட்டேன். அவர்கள் மூலம் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாடகை 17,000 கேட்டனர். என் கணவர் நல்ல உடல்நலனுடன் இருந்தவர் அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனதாகக் கூறுவதும் ஓட்டல் நிர்வாகம் காவல்துறை ஆகியோரின் முரண்பாடான தகவல்களும் எனக்கு வேதனையைத் தந்தது.

எனவே எனது ஆதங்கத்தை வீடியோவாக பதிவுசெய்து வாட்ஸ்அப் குழுக்களில் வெளியிட்டேன். இதைப் பார்த்துவிட்டு 'மக்கள் பாதை' அமைப்பைச் சேர்ந்த கீதா என்பவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் என்னை வந்து சந்தித்தார். அவர் வந்த பிறகே 17,000 வாடகை கேட்ட காவல்துறை பிறகு இலவசமாக ஆம்புலன்ஸ் மூலம் எனது கணவர் உடலை ஊருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துகொடுத்தது.

எனது கணவரின், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் கிடைக்கவில்லை. அவர் இறப்பு எப்படி ஏற்பட்டு இருந்தாலும் அதற்குக் காரணம் ஓட்டல் நிர்வாகமும் அவரைத் தொடர்ந்து கண்காணிக்காத மருத்துவக் குழுவினரும்தான்.

நோய்தொற்று இல்லாத என் கணவரை சிங்கப்பூர் அரசு மாதக் கணக்கில் பாதுகாப்பாக வைத்திருந்து அனுப்பி வைத்துள்ளது. ஆனால் நமது அரசாங்கம் தனிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் சொகுசு ஓட்டல் அறையில் சிறைச்சாலையில் அடைத்து வைத்தது போல் என் கணவரை அடைத்து வைத்து அவரை சாகடித்து விட்டனர்.

எங்களுக்கு திருமணமாகி எழு ஆண்டுகள் ஆகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. எங்களுக்கு உதவி செய்ய என் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் ஆண்கள் யாரும் இல்லை. இப்போது என் கணவரை இழந்து தனித்து தவித்து நிற்கிறேன் என்று கதறி அழுதபடி கூறுகிறார் சந்திரா.

இவரது வாட்ஸ்அப் வீடியோ பேச்சை கேட்ட திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இவரிடம் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து உதயநிதி, நோய்த் தொற்று இல்லாத சந்திராவின் கணவரை தனி அறையில் தனிமைப் படுத்தியுள்ளனர். அவரை தொடர்ந்து கண்காணிக்காததால் அவர் இறந்துள்ளார்.

அவரை கண்காணிக்க முடியாத அரசு அப்படிப்பட்டவர்களை ஏன் தனிமைப் படுத்தவேண்டும். குளியல் அறையில் இறந்து கிடந்ததாகக் காவல்துறை கூறுகிறது. என்ன நடந்தது என்பதை மறைக்கிறது. சந்திரா போன்ற எளியவர்களின் கண்ணீர் இவர்களைச் சும்மாவிடாது சந்திராவிற்கான உதவிகளை திமுக செய்யும் என்று கூறியுள்ளார்.

நோயில்லாத மனிதர்களையும் அரசு சாகடிக்கிறது. சித்த மருத்துவத்தின் மூலம் சென்னை ஜவகர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழப்பு இல்லாமல். அந்தக் கல்லூரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் சித்தமருந்துகள் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் காற்றோட்டமாக நடைப்பயிற்சி யோகா என்று அவரவர் விருப்பப்படி செய்து வருகின்றனர்.

அறையில் அடைத்து வைத்து அவர்களை யாரும் நெருங்காமல் தனிமையிலேயே இருந்து மன உளைச்சலுக்கு ஆளாகாமல் சகமனிதர்கள் போல இங்கே நடத்தப்படுகிறார்கள். இதுவே நோயிலிருந்து குணமாக உதவுகிறது.

இதுபோன்று திறந்தவேளி மருத்துவ முகாம்களை உருவாக்கி சித்த மருந்துகள், ஹோமியோபதி, ஆயுர்வேதிக் ஆகியவற்றின் மூலம் குணமாக்கப்படுகின்றனர் என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகும் மத்திய மாநில அரசுகள் இவற்றிற்கு முக்கியத்துவம் தராமல் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் பணம் கொழிக்கவேண்டும் என்பதற்காக இதோ மருந்து கண்டுபிடித்துவிட்டோம் அதோ மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று போக்குக் காட்டிக்கொண்டே மனித உயிர்களைக் கரோனாவுக்கு பலி கொடுத்துவருகிறது.

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுபோல நமது சித்தமருத்துவத்தை முதன்மைப்படுத்தாமல் மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள் நோயில் இருந்து விடுபட்ட மக்கள்.

சுந்தரவேல் விஷயத்தில் என்ன நடந்தது என்று ஓட்டல் நிர்வாகத்திடம் பதில் கேட்டு செய்தி வெளியிட தொடர்பு கொண்ட போது இணைப்பு கிடைக்கவில்லை.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT