Skip to main content

துபாயில் இறந்த கணவர்... உடலை தமிழகம் கொண்டுவர முடியாமல் 4 குழந்தைகளுடன் கதறும் தாய்... ஏழைக் குடும்பத்திற்கு அரசு உதவ கோரிக்கை

Published on 21/07/2020 | Edited on 21/07/2020
Tittakudi - balakrishnan - vadakara poodi

 

''துபாயில் கணவனுக்கு உடல்நல பாதிப்பு... கணவனை மீட்க போராடும் மனைவி...'' என்ற தலைப்பில் கடந்த 19ஆம் தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் துபாயில் இருந்த பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அவரது மனைவி அஞ்சலைக்கும், நான்கு குழந்தைகளுக்கும் தெரியவந்ததும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

துபாயில் உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்று வரும் கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வடகரா பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலை.

 

பாலகிருஷ்ணன் 2007ஆம் ஆண்டு வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு சார்ஜாவில் உள்ள ரான்ஜஸ் பில்டிங் கன்சக்சன் என்ற நிறுவனத்தில் கட்டுமான துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தினமும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மொபைலில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் அவர் போன் மூலம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை. அவர் வேலை செய்த கம்பெனியிலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

 

இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் பாலகிருஷ்ணன் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தொலைபேசி மூலம் அவரது மனைவியிடம் கூறியுள்ளனர். மேலும் அவரது நிலைமை மிகவும் சீரியஸாக இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியும் தனது கணவரை தமிழகம் கொண்டுவந்து இங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிடலாம் என்று பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமாரிடம் தனது குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

 

அவரது கணவர் குறித்து அவரிடம் நாம் கடந்த 18ஆம் தேதி கேட்டபோது, ஏற்கனவே எனது கணவருக்கு தலையில் ஏதோ கட்டி இருப்பதாகவும் அதை சரி செய்வதற்காக நமது ஊருக்கு வந்து இங்குள்ள மருத்துவமனைகள் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து புறப்படுவதற்காக பல மாதங்களாகவே முயற்சி செய்து வந்துள்ளார்.

 

இந்திய தூதரகத்தில் தனது உடல்நிலையை பற்றி எழுத்து மூலம் முறையாக விண்ணப்பித்து காத்துக்கிடந்துள்ளார். இந்த கரோனா பரவல் காரணமாக அவரை ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதப்படுத்தி உள்ளனர். இந்த கால தாமதம் அவருக்கு ஆபத்தான நிலையை உருவாகியுள்ளது. வேலையில் இருந்த போதே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவருடன் வேலை செய்த நண்பர்கள் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இன்னும் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். நமது தமிழக அரசு மற்றும் இந்திய அரசுக்கு எனது கணவரை உடனடியாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு புகார் மனுக்களை அனுப்பி உள்ளேன். அரசு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

 

Tittakudi - balakrishnan - vadakara poodi

        குழந்தைகளுடன் அஞ்சலை                           பாலகிருஷ்ணன் 

 

அவர் வேலை செய்த கன்சக்ஷன் கம்பெனியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் பொறுப்போடு எந்த பதிலும் சொல்லவில்லை. என் கணவருக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லாத மாதிரி பதில் கூறுகின்றனர். எனவே எனது கணவரின் நிலைமை அங்கு எப்படி உள்ளது. அவர் இங்கு கொண்டு வருவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்காக  நானும் எனது நான்கு பிள்ளைகளும் காத்திருக்கிறோம் என்றார்  கலங்கிய கண்களுடன் அஞ்சலை.

 

பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி மூலம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி பிரசவத்தின்போது இறந்து போனார். அதன்பிறகு இரண்டாவது மனைவியாக அஞ்சலை என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஞ்சலை மற்றும் நான்கு குழந்தைகளும் பாலகிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருந்தனர். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக அவரது நண்பர்கள் மூலம் அங்கிருந்து வரும்தகவல்கள் அவரது குடும்பத்தினரை கலக்கமடைய வைத்தது.

 

பாலகிருஷ்ணனின் மனைவி அவரது  நான்கு பிள்ளைகள் பரிதவித்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் இந்திய தூதரகம் பாலகிருஷ்ணன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடகராம் பூண்டி கிராம மக்களும் அவரது குடும்பத்தினர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பாலகிருஷ்ணன் போன்று அயல்நாடுகளில் வெவ்வேறு உடல்நல பாதிப்புகளில் அவஸ்தைப்படும் தமிழர்களை விரைந்து தமிழகம் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் கிடைத்தததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

 

எப்படியாவது உடல்நிலை சரியில்லாத கணவரை அரசின் உதவியால் தமிழகம் கொண்டு வந்து இங்கு மருத்துவம் பார்க்கலாம் என்று நினைத்தோம், அது நடக்காமல் போய்விட்டது. இப்போது அவரது உடலை எங்கள் ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறுகின்றனர் அவரது மனைவி அஞ்சலை மற்றும் குழந்தைகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.