தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 515 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளில், தி.மு.க. கூட்டணி 271 பதவிகளையும், அ.தி.மு.க. கூட்டணி 240 பதவிளையும் பெற்றன. 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 2,356 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 2,199 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களில் வெற்றிபெற்று ஜனவரி 6-ம் தேதி பதவியேற்றுள்ளனர்.
அந்த மனுவில், மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதும், சான்றிதழ்கள் வழங்காமல், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டதைப் போல, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலிலும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் புனிதத்தை உறுதி செய்ய இந்தத் தேர்தல் நடைமுறையை முழுமையாக ஆடியோவுடன் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். மேலும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் தவிர வேறு எவரையும் அனுமதிக்க கூடாது எனவும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகளை அறிவிப்பதில் தாமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். வாக்களிக்க வரும் உறுப்பினர்கள் இங்க் போன்ற பொருட்கள் எதையும் எடுத்து வர அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை திமுக சட்டப் பிரிவு செயலாளர் என்ற முறையில் தாக்கல் செய்துள்ளதால், இதனைப் பொது நல வழக்காகக் கருத முடியாது எனக் கூறி, வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.