ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்ய முடியாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்ற பகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும், தள்ளிவைக்கப்பட்டுள்ள ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தக் கோரியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன் நேற்று (20.01.2020) மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சேலம் உள்ளிட்ட ஒன்றியங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

cctv camera state election commission chennai high raised the questions

Advertisment

போதிய ஒன்றிய கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அதிகாரிகளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணத்தினால் 10 ஒன்றியங்களில் தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. அதுபோல், மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள்தான் பரிசீலிப்பார்கள் என்றும் திமுகவின் மனு விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டது எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மறைமுகத் தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை என மாநில தேர்தல் ஆணையம் கூறுவது பொய் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலின் போது அதிமுக பிரமுகர் டி.எஸ்.பி. வெங்கடேசனை அரிவாளால் தாக்கினார் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

இதனையடுத்து, தேர்தலின்போது பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் யாருடைய கட்டுபாட்டில் உள்ளன? கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்குமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Advertisment

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ், மாநில தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வதற்காகத்தான் தேர்தலில் சிசிடிவி கேமரா பயன்படுத்தப்பட்டது எனவும், தற்போது வரை சிசிடிவி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

சிசிடிவி பதிவுகள் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளில் முறைகேடு நடத்த வாய்ப்புள்ளதா என விளக்கம் பெற வேண்டும் எனவும் தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.