Skip to main content

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை! காதலனுக்கு 7 ஆண்டுகள் சிறை!!

Published on 12/11/2019 | Edited on 13/11/2019

கிருஷ்ணகிரி அருகே, திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க வைத்து கொலை செய்த காதலனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜெகதேவி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் மனோகரன் (28). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ரேகா (25) என்பவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இருவரும் சொந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக (லிவிங் டுகெதர்) குடும்பம் நடத்தி வந்தனர். பலரும் பலவாறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், ஒரு கட்டத்தில் ரேகா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனோகரனிடம் நச்சரிக்கத் தொடங்கினார். இதற்கிடையே, வரதட்சணை கொடுத்தால்தான் ரேகாவை மருமகளாக ஏற்றுக்கொள்வோம் என்று மனோகரனின் பெற்றோர் கூறியுள்ளனர். 

krishnagiri incident cool drinks police investigation


இதையடுத்து ரேகா, தனது தாய் செல்வராணியிடம் இருந்து 61500 ரூபாய் வாங்கி வரதட்சணையாக மனோகரன் குடும்பத்தினரிடம் கொடுத்தார். ஆனால் அதன் பிறகும், திருமணம் செய்யாமல் மனோகரன் காலம் கடத்தி வந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ரேகா, திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரம் அடைந்த மனோகரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 2012ம் ஆண்டு பிப். 22ம் தேதி, ரேகாவை பர்கூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்றார். 


‘நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டுதான் வாழ வேண்டுமா? இப்போதே நாம் கணவன், மனைவியாகத்தானே இருக்கிறோம். நமக்குள் பிரச்னை வராமல் இருக்க, நாம் இருவரும் விஷம் குடித்து இறந்து விடலாம்,’என்றெல்லாம் ஏதேதோ பேசி அவரையும் தற்கொலைக்கு தூண்டினார். பின்னர் இரண்டு டம்ளர்களில் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து, அதில் ஒரு டம்பளரை ரேகாவுக்கு கொடுத்துள்ளார் மனோகரன். அவர் குடித்த பிறகு, மனோகரன் தான் விஷ குளிர்பானத்தைக் குடிக்காமல் கீழே ஊற்றிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்வதற்குள் ரேகா சிறிது நேரத்தில் இறந்தார். 


இதுகுறித்த புகாரின்பேரில், அப்போதிருந்த பர்கூர் காவல் ஆய்வாளர் சம்பத்குமார், ரேகாவை கொலை செய்த குற்றத்திற்காக மனோகரன், உடந்தையாக இருந்த அவருடைய தாயார் இந்திராணி, தந்தை பெருமாள், உறவினர் ராசாத்தி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜராகி வாதாடினார். இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் திங்கள்கிழமை (நவ. 11, 2019) தீர்ப்பு வழங்கப்பட்டது. 


முதல் குற்றவாளியான மனோகரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்திராணி, பெருமாள், ராசாத்தி ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.