Skip to main content

“நான் எம்.எல்.ஏவாக என் புலிக் குட்டிகளே காரணம்” - அமைச்சர் துரைமுருகன் உருக்கம் 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

"I am an MLA because of my tiger cubs" - Minister Duraimurugan

 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு மாளிகை திறப்பு விழா வேலூர் மாநகராட்சித் துணை மேயர் சுனில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு மாளிகையைத் திறந்து வைத்தார்.

 

பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “காட்பாடி சட்டமன்றத்திற்கு வெளியே சென்றால்தான் நான் அமைச்சர். வெளியில் தான் என்னுடைய அதிகாரம் இருக்கும். காட்பாடிக்குள் நான் வந்து விட்டால் நான் உங்களின் துரைமுருகன். துரைமுருகன் இன்றைக்கு வேண்டுமானால் அமைச்சராக இருக்கலாம். பொதுச்செயலாளராக இருக்கலாம். இந்த ஊர் தான் (கழிஞ்சூர்) என்னைத் திமுகவில் இணைய வைத்தது. இதே கழிஞ்சூரில் நான் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் நெத்தியில் திருநீறு பட்டையும் குங்குமமும் வைத்திருப்பேன். அப்போது என்னுடைய ஓவிய ஆசிரியர் சுப்பிரமணியம், குங்குமம் வைப்பதால் என்ன பயன்? திருநீறு பட்டை அணிவதால் என்ன பயன்? எனக் கேட்டார். அவரின் கேள்விகளே என்னைத் திமுகவில் இணைய வைத்தது.

 

இன்றைக்கு நான் எம்.எல்.ஏ. ஆகவும் அமைச்சராகவும் இருக்கின்றேன் என்றால் இரண்டு பேருக்கு நான் இந்தக் கூட்டத்தில் நன்றி சொல்ல வேண்டும். ஒன்னு வன்னிய ராஜா. அவரோடு சேர்ந்து வேலூர் துணை மேயர் சுனில்குமார். என்ன காரணம் என்று கேட்பீர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில்  ஓட்டு எண்ணுகிற போது நமக்கு வந்த ஓட்டெல்லாம் அவர்கள் ஓட்டு என்று தூக்கித் தூக்கிப் போட்டு விட்டுப் போனார்கள். நான் உள்ளே போகவில்லை. நான் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்படி ஒரு திருட்டுத்தனம் செய்து கொண்டிருந்தபோது, அந்த இடத்தில் எப்படியாவது அவர்கள் ஜெயித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். நான் கூட எதற்கு வம்பு என இருந்தேன். ஆனால் இந்த இரண்டு புலிக் குட்டிகளும் உள்ளே போய் நுழைந்து அங்கே கர்ஜித்து சட்டம் பேசி அதற்குப் பிறகு தபால் ஓட்டுகளை எண்ண வைத்து அந்தப் பெருவாரியான ஓட்டுகள் நமக்கு உண்டு என்பதை நிரூபித்து என்னை வெற்றி வீரனாக அந்த அதிசயத்தை நிகழ்த்தியவர்கள் வன்னிய ராஜாவும், துணை மேயர் சுனில் குமாரும் தான். 

 

நான் உள்ளபடியே சொல்கிறேன். அந்த இரண்டு பேரும் இல்லாவிட்டால் நான் உள்ளே போய் இருக்க மாட்டேன். நான் எப்போதும் ஓட்டு எண்ணுகிற இடத்தில் உள்ளே போக மாட்டேன். அவர்கள் ஏதோ சொதப்பிட்டு போயிருக்கார்கள். ஆனால் என் நெஞ்சில் இருக்கும் வரையில் அவர்களுடைய நினைவு இருக்கும். நன்றி இருக்கும். அந்த நன்றி நான் இங்கே வெளிப்படுத்தியாக வேண்டும்” என அமைச்சர் துரைமுருகன் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க பரப்புரையில் திடீர் எண்ட்ரி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்; அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Durai Murugan who made a sudden entry in the BMC lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பிரச்சாரக் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான பா.ம.க கட்சிக்கு, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை ஒதிக்கியுள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில், பா.ம.க வேட்பாளராக பாலு களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்த போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வழியே வந்த போது அங்கு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பா.ம.க வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (15-04-24) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனை ஆதரித்து பரப்புரை செய்து முடித்துவிட்டு, பா.ம.க வேட்பாளர் பரப்புரை செய்த அந்த வழியாக வந்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனை பார்த்த பா.ம.க வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். என்று கூறிவர், உங்கள் வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார். 

மேலும், நான் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவேன். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும், முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால், அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது. 

Next Story

"ஊருக்குள் வரக் கூடாது அங்கேயே நில்லுங்கள்” - அமைச்சருக்கு எதிர்ப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kanikapuram area People  struggle against Minister Durai Murugan

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை வழிமறித்து ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அப்போது ஒரே சமூகத்தினர் உள்ள ஊரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு சாலையில் மரக்கட்டைகளும்,  இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஊருக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து நுழைய முயற்சித்த கட்சியினரை ஊருக்குள் வராதே, என்ன செய்தார் எம்.பி. 5 ஆண்டுகளில் சாலை கூட சரியாக போடவில்லை. எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என எதிர்ப்பை தெரிவித்து ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர்.  இதனால் அங்கு வாக்குவாதம் ஆகி பரபரப்பாகியது மேலும் அத்துமீறி நுழைந்தால் வாகனத்தின் மீது மது பாட்டிலும், கற்களையும் வீசி கண்ணாடியை உடைப்போம். அசிங்கப்படாமல் போய்விடுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்றனர். தனது சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடம் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் துரைமுருகனை அதே சமூகத்தினர் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.