How did Jayalalithaa die? OBS., EPS., To explain! ” - EVKS Elangovan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆறுமுகம் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை (மார்ச் 9) சேலம் வந்திருந்தார். அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது; “சேலம் மாநகராட்சி துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதாதேவி தேர்வு செய்யப்பட்டதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 9 மாதத்தில் இலக்கை தாண்டி பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார். ஒரு முதல்வர், குறுகிய காலத்தில் இத்தனை திட்டங்களை நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது.

Advertisment

உலக அளவில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறந்த முதல்வராகவும், தலைவராகவும் திகழ்கிறார். தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மீதியுள்ள வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் குடும்பத் தலைவிகள் பெயரில் தரப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் வருவதற்கு அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் நூறு சதவீதம் எதிர்க்கிறது. இந்தப் பிரச்சனையில் முழுக்க முழுக்க தமிழக முதல்வரை பின்பற்றுவோம். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி தமிழக காங்கிரஸ் கேட்டு நடக்கும். உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் குழப்பங்கள் இருந்தது. அதை மிகச்சிறந்த ஒரு அறிக்கையின் மூலமாக முதல்வர் சரி செய்துள்ளார். இது கூட்டணி தர்மத்தில் மிகப்பெரிய அம்சமாக இருக்கிறது.

Advertisment

விரைவில் வர இருக்கும் தமிழக பட்ஜெட், மக்களுக்கான பட்ஜெட் ஆக இருக்கும். பாலியல் குற்றங்கள் இப்போதுதான் அதிகரித்துள்ளதாக கூறுவது தவறு. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் மிக பயங்கரமான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளையும் கடந்த ஆட்சியின்போது எடுக்கவில்லை. குழந்தைகளுக்கு அநீதி, கேவலமான பிரச்னையை உண்டாக்குபவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். முதல்வர் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.

ஓ. பன்னீசெல்வத்தின் உள்ளத்தில் எந்தவிதமான கள்ளம், கபடமும் இல்லை என்று சொன்னால் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இதற்காக ஆறுமுகசாமி கமிஷன் 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் வராதது ஏன் என்று தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறதா என்றும் தெரியவில்லை. உண்மையில் நடந்தது என்ன? ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை முதல்வராக பொறுப்பு வகித்த பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக ஆறுமுகசாமி கமிஷனிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.” இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.