ADVERTISEMENT

ஏழுபேர் விடுதலை... இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கும் ஆளுநர்! –உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

10:05 PM Jul 29, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை விவகாரத்தில், பல்நோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார் என, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பேரறிவாளனுக்கு உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ளன. அவருக்கு, முன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் விதமாக, 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும். தற்போது, கரோனா காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மகனுக்கு பரோல் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது, இரண்டு ஆண்டுகளாகியும் ஆளுநர் முடிவை அறிவிக்காதது ஏன்? மேலும் அரசியல் சாசனத்தில் ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், 2 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருக்கலமா? அமைச்சரவை முடிவை ஏற்பதும் நிராகரிப்பதும் ஆளுநரின் உரிமை. ஆனால் முடிவைத் தெரிவிக்க வேண்டும். அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பரோல் வழங்குவதில்கூட தகுந்த உத்தரவைப் பிறப்பிக்காத சிறை அதிகாரிகள் மீது ஏன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக் கூடாது? பரோல் அளிப்பதும், நிராகரிப்பதும் அதிகாரிகள் உரிமைதான். ஆனால், பரோல் கோரிய மனு மீது முடிவெடுக்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நினைவூட்டல் மனு அளிக்கப்பட்டும், ஏன் ஜூலை வரை அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை? அதிகாரிகள் உரிய முறையில் செயல்படாததால்தான், நீதிமன்றத்தின் வழக்கு சுமை அதிகரிக்கிறது. இதுபோன்ற கவனிக்கக்கூடிய வழக்குகளில்கூட, உரிய பதிலை அதிகாரிகள் அளிக்காமல் உள்ளனர். இதுபோன்ற நிலையில், சாதாரண கைதிகளின் வழக்குகளில் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடிகிறது.

அரசு, சிறைத்துறை, அரசு அதிகாரிகள் உரிய நேரத்தில் கடமையாற்றினால் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை. மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் கும்பகர்ணன் மாதிரி அதிகாரிகள் தூங்கி கொண்டுள்ளீர்களா? அவர்கள் ஏற்கனவே சிறையில் உள்ளனர். தற்போது வழக்கறிஞருக்கு வேறு செலவு செய்ய வேண்டுமா? இந்தக் கால தாமதத்திற்கு, அரசுக்கு வழக்கு செலவு அபராதமாக விதிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், சிறையில் உள்ள கைதிகளுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கடந்த விசாரணையின்போது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக ஆளுநரின் துணைச் செயலாளர், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு (உள்துறைச் செயலாளர்) பதில் அளித்துள்ளார். அதில், 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க, பல்நோக்கு விசாரணை முகமையின் (MDMA) இறுதி அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார். பேரறிவாளன் பரோல் குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், பரோல் மனு மீது தமிழக சிறைத்துறை, வரும் வெள்ளிக் கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வழக்கின் அடுத்த விசாரணையை வரும் திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT