'Nalini gets one month parole' - Tamil Nadu government informs in High Court!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவருகிறார். இந்த நிலையில், நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

அவரது மனுவில், "கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தனது உடல்நிலை சரியில்லை என்றும், தனது மகள் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் அரசிடம் மனு கொடுத்திருந்தேன். மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நளினியை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு கடந்தமுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசுத் தரப்பில், நளினி பரோல் தொடர்பாக அவரது தாயார் அனுப்பிய மனுவானது பரிசீலனையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில்நளினியின் தாயார், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு இன்று (23/12/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா நேரில் ஆஜராகி, நளினியின் தாயார் மனு மீது தமிழ்நாடு அரசு பரிசீலித்து முடிவெடுத்துள்ளது. மேலும், நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதனையேற்ற நீதிபதிகள், நளினியின் தாயார் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.