Skip to main content

“துடிக்க துடிக்க கொன்னுட்டானுங்களே... என் புள்ள உசுரு எப்படி துடிச்சிருக்கும்...”-மீனவரின் தாய் கதறல்!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021
fisherman passed away and fishers involved in struggle

 

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொல்லப்படும் சம்பவம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 900 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதாவது   துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. நேவி கப்பலால் மீனவர் படகுகளை இடித்து கீழே தள்ளி அவர்களை மூழ்கடித்தது. இப்படி பல்வேறு சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்திருக்கிறது. கடந்த 17ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து 118 மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

 

அதில் ஒரு படகில் மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகியோர் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 18ஆம் தேதி அதிகாலை அந்த பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களின் மீன்பிடி படகில் இடித்து படகை மூழ்கடித்து உள்ளனர். இதில் சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் மீனவர் ராஜ்கிரண் என்ன ஆனார் என்று தெரியாமலேயே இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களையும் இலங்கை அரசு அறிவிக்கவில்லை.

 

fisherman passed away and fishers involved in struggle

 

மீனவர் ராஜ்கிரண் இறந்ததாக தகவல்கள் பரவியிருந்தது. இறந்தவரின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை ஒப்படைக்க வேண்டும். தொடர்ந்து இலங்கை நடத்தும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டைபட்டினத்தில் தொடர்ந்து 3வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதோடு உண்ணாவிரதம் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த போராட்டம் உடல் ஒப்படைக்கப்படும் வரையும் கைது செய்யப்பட்டவர்கள் திரும்ப ஒப்படைக்கும் வரைக்கும் தொடர்ந்து நீடிக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இதுபோல் தொடர்ந்து இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் வழக்கமாக இருப்பதை இந்திய அரசாங்கம் இதுவரை மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் இருந்த ராஜ்கிரண் தாய் ஆரவள்ளி, “என் மகனுக்கு கல்யாணமாகி 40 நாள்ல இலங்கை நேவி இப்படி என் புள்ளய துடிக்க துடிக்க கொன்னுட்டானுங்களே.. அவன் மனசு என்னமா துடிச்சிருக்கும்” என்று கதறி அழுதார்.

 

 

 

சார்ந்த செய்திகள்