ADVERTISEMENT

குடிப்பழக்கம்... கடன் நெருக்கடி... குடும்பமே விஷம் அருந்தியதால் பரபரப்பு!

10:46 PM Dec 29, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகிலுள்ளது குலையநேரி. இங்குள்ள கண்ணன் (40) தச்சுவேலை பார்க்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு பார்வதி, பவிஷ்கா என இரு மகள்கள் உள்ளனர்.

மகள்கள் இருவரும் ஆரம்பக்கல்வி பயில்பவர்கள். கண்ணனுக்கு தச்சுவேலையில் கிடைக்கும் கூலிப்பணம் பெரும்பாலும் அவர் குடிப்பதற்கே சரியாக இருக்கிறது. குடிப்பழக்கம் கொண்ட கண்ணனால், அதனை விடமுடியவில்லை. இதன்காரணமாக கண்ணன் அக்கம் பக்கம் உள்ள சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். அவரின் குடிப்பழக்கம் தொடர்ந்த போதிலும் கடன் தொல்லைகள் நெருக்கடி கொடுத்திருக்கின்றன.

இதனால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. குடும்பச் சூழலைச் சமாளிப்பதற்காக அருகிலுள்ள குவாரியில் கூலி வேலைக்குப் போய் குடும்பத்தைப் பராமரித்திருக்கிறார் சீதாலட்சுமி. ஒரு பக்கம் தகராறு மறுபக்கம் கணவனால் கடன் தொல்லை. விரக்தியடைந்த தம்பதியர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, நேற்று மாலை குழந்தைகள் உட்பட நான்கு பேர்களும் விஷம் குடித்து மயங்கியிருக்கிறார்கள்.

இதுதெரிந்த அக்கம் பக்கத்தினர், அவர்கள் 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வழக்குப் பதிவு செய்த சுரண்டை போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வீ.கே. புதூர் தாசில்தார் முருகு செல்வி, டி.எஸ்.பி. பொன்னிவளவன், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடும்பமே விஷமருந்திய சம்பவம் அங்கு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT