தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரு தினங்களாக கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வினை திண்டுக்கல், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல்லிலும், மதுரையிலும் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று நெல்லையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இ-பாஸ் பெறுவதற்கான முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றார். அதேபோல் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படியே முடிவெடுக்கப்படும் என தெரிவித்த முதல்வர், இ.ஐ.ஏ. எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அமைத்த குழு தரும் அறிக்கை அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
முன்னாள் தி.மு.க தலைவர் கலைஞரின் இரண்டாவது நினைவு தினமான இன்று திமுக தலைவர் ஸ்டாலின் 2021-ல் தமிழகத்தில் ஆறாவது முறையாக தி.மு.க அரியணை ஏறும் என சூளுரைத்திருந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு,
2021ல் யாரை அரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள். தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என தமிழக மக்களே முடிவு செய்வார்கள் என்றார்.
செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படும். அதேபோல் அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.