தமிழகத்திற்கு, மும்பை இருந்து வருவோரின் எண்ணிக்கையால் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இறப்புகள் குறைவாக இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பல நாட்கள் பச்சை மண்டலமாக இருந்தாலும் ஒன்று என்ற ஒற்றை இலக்கத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தொடங்கி அடுத்தடுத்து கோயம்பேடு ரிட்டன், மும்பை ரிட்டன் மூலம் கரோனா நோயாளிகள் வந்தனர். புதுக்கோட்டையில் பழைய மாவட்ட மருத்துவமனையான டாக்டர் முத்துலெட்சுமி மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையாக இருந்த ராணியார் மருத்துவமனையில் கரோனா வார்டுகள் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மதியம் ஒன்றரை வயது குழந்தை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வியாழக்கிழமை இரவு பழைய மாவட்ட மருத்துவமனையில் இருந்து 4 வயது சிறுவன் உள்பட 4 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குணமடைந்து வீட்டிற்கு புறப்பட்ட கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் கூறும்போது... "மும்பையில் மருத்துவமனைக்கு போனால் அங்கே ஹவுஸ் புல் என்று போர்டு வைத்திருந்தார்கள். அந்த அச்சத்தோடு சொந்த ஊருக்கு வந்தோம். ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு சோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு அழைத்து வந்தார்கள். பயத்துடன் வந்தோம். ஆனால் இங்கே தொடக்கூடாத நோயாளிகளை போல நடத்தாமல், சொந்த வீட்டில் வைத்து பார்ப்பது போல வைத்து பார்த்தனர், எதைப் பற்றியும் கவலை கொள்ளாத அளவில். மருத்துவப் பணியாளர்கள் தயார் செய்த புரதச் சத்துகள் நிறைந்த உணவுகள், சூப்புகள், நவதானியங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றை கொடுத்ததுடன் பல்வேறு பயிற்சிகளும் கொடுத்து அச்சமின்றி தங்க வைத்திருந்தார்கள். இதைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.