சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் விநாயகபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் அங்கிருக்கும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர். அவர்களைத் தடுக்க முயன்ற அந்த சிறுவனின் தந்தையையும் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்கள். பின்பு அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தை அறிந்த காசிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்துள்ளார்கள். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெட்டுப்பட்ட சிறுவனின் அண்ணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது 22) மற்றும் புவனேஷ் (வயது 23) ஆகியோருக்கும் யார் ஏரியாவில் பெரிய ஆள் என்ற மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதல் நாளடைவில் கொலை செய்யும் அளவிற்கு கொண்டு செல்லப்பட்டு பிரவீனும் புவனேஷும் சிறுவனின் அண்ணனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் அண்ணன் என நினைத்து ஆள்மாறாட்டத்தில் தம்பியை வெட்டியதாகத் தெரியவந்துள்ளது. பின்பு காசிமேடு காவல்துறையினர் சிறுவனை வெட்டிவிட்டு தப்பியோடிய பிரவீனையும் புவனேசையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.