Skip to main content

  மாநில உரிமைகளை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும்! அன்புமணி

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
n

 

 பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை:  ’’முல்லைப்பெரியாறு உள்ளிட்ட தமிழகத்திற்கு சொந்தமான நான்கு அணைகளின் பராமரிப்பு உரிமையை பறிக்க வகை செய்யும் அணைகள் பாதுகாப்பு சட்ட முன்வரைவை அடுத்த மாதம் 11&ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

 

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முந்தைய ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி ஆட்சியிலேயே தொடங்கி விட்டன. இதற்கான வரைவு சட்ட முன்வரைவை 2010-ஆம் ஆண்டில் தயாரித்த அப்போதைய மன்மோகன்சிங் அரசு, அது குறித்து மாநில அரசுகளின் கருத்து கேட்டது. அந்த சட்ட முன்வரைவுக்கு அப்போதே தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க்கட்சிகளும் இந்த சட்ட முன்வரைவுக்கு  எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட இம்மசோதா, பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஒரு கட்டத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அந்த சட்ட முன்வரைவை கைவிடுவதாக அறிவித்தது.

 

ஆனால், 2014-ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு, மீண்டும் அணைகள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கிறது. இத்தகைய சட்டம் இந்தியாவுக்கு தேவையற்றது என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், கடந்த ஜுன் 13&ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட்டன. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி,  கடந்த ஜூன் 26-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழகத்தின் இத்தகைய உணர்வுகளை மதிக்காமல் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றியே  தீர வேண்டும் என்று மத்திய அரசு துடிப்பது சர்வாதிகாரம் ஆகும். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

 

அணைகள் பாதுகாப்புச் சட்டம் அணைகள் மற்றும் ஆறுகள் மீதான உரிமைகளை பறிக்கும் செயல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஒரு மாநிலத்தில் ஓர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை அந்த மாநிலத்திற்கே சொந்தமானது; அவற்றை பராமரிக்கும் அதிகாரமும், உரிமையும் அணை அமைந்திருக்கும் மாநிலத்திற்கே சொந்தமானது என இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முல்லைப் பெரியாறு மீதான தமிழகத்தின் உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டு விடும். முல்லைப் பெரியாறு அணை கேரளத்தில் அமைந்திருந்தாலும் அந்த நீரை பயன்படுத்துவது தமிழகம் தான் என்பதால், அது குறித்த இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி அந்த அணையை பராமரிக்கும் பொறுப்பு  தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அணைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டால் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு கேரளத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் அந்த அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது கனவாகவே போய்விடும். அதுமட்டுமின்றி, முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டது என்று கூறி அதை தகர்ப்பதும் கேரள மாநில அரசுக்கு மிகவும் எளிதாகி விடும்.

 

முல்லைப்பெரியாறு அணை மட்டுமின்றி, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய மேலும்   3 அணைகளை பராமரிக்கும் அதிகாரமும் கேரளத்துக்கு தாரை வார்க்கப்படும். இது தமிழக நலனுக்கு நல்லதல்ல. அதுமட்டுமின்றி, மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு அளிக்க இச்சட்ட முன்வரைவில் வகை செய்யப்பட்டிருக்கிறது தமிழக அரசின் அதிகார வரம்பில் தலையிடும் செயலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சி முறையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய சட்ட முன்வரைவை திணிக்கக் கூடாது. உடனடியாக இந்த முன்வரைவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள்; கொடுக்கத் தயாராக உள்ளார்கள்” - அன்புமணி

Published on 04/12/2022 | Edited on 04/12/2022

 

“Borrow anywhere; They are ready to give” - Anbumani

 

எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தின் முதன்மை பிரச்சனை ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர்த் திட்டம். அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு காரணங்கள் வேண்டாம். தென்பெண்ணையில் ஆண்டுக்கு 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளது. உபரி நீர் கடலில் கலக்கிறது. அதை இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும். இதுதான் நீர் மேலாண்மை. அடுத்த 5 ஆண்டுகளில் முதல்வர் 1 லட்சம் கோடியை நீர்மேலாண்மைக்குச் செலவிட வேண்டும். எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் இதுபோன்ற நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றார்

 

மேலும் பேசிய அவர், “2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு எங்கள் அறிவிப்பு வரும். பார் நடத்துவது அரசாங்க வேலை கிடையாது. அது சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அதை மேல்முறையீடு செய்து ஸ்டே வாங்கியுள்ளனர். எந்த சட்டத்தில் பார் நடத்தலாம் என்ற அதிகாரம் உள்ளது” எனக் கூறினார்.