Skip to main content

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரை அதிர வைக்கும் காங்கிரஸின் நலத்திட்ட உதவிகள்! 

Published on 20/12/2020 | Edited on 20/12/2020

 

thoothukudi district, sri vaikuntam congress party leader peoples vehicles



தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை. ஆனால், காங்கிரஸுக்கான பாரம்பரிய தொகுதிகளை அக்கட்சிக்கு தி.மு.க ஒதுக்கிவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நம்பிக்கையைக் கட்சி நிர்வாகிகளிடமும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்படுத்தியிருப்பதால் அக்கட்சியைச் சேர்ந்த பலரும் தொகுதிக்குள் வலம் வருகிறார்கள். அப்படி வலம் வருவதில் முன்னணியில் இருக்கிறார் இளைஞர் காங்கிரஸின் முதன்மை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மறைந்த ஊர்வசி செல்வராஜின் மகனுமான ஊர்வசி அமிர்தராஜ். 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான ஸ்ரீவைகுண்டம் தொகுதியை குறி வைத்து களமிறங்கியுள்ளார் ஊர்வசி அமிர்தராஜ். இதுவரை மூன்று முறை தொகுதி முழுக்க வலம் வந்துள்ள ஊர்வசி அமிர்தராஜ், மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து இதுவரை 2 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்து முடித்துள்ளார். கடந்த இரு வாரங்களாக தேர்தல் பணிகளை தொகுதிக்குள் துவக்கியிருக்கும் அவர், நேற்று பெரிய தாழை கிராமத்தில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை காங்கிரஸ் சார்பில் நடத்தியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக வழங்கினார் ஊர்வசி அமிர்தராஜ். 

 

தேர்தலை மையப்படுத்தி காங்கிரஸ் நடத்தும் இத்தகைய நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதனை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸுக்கு தி.மு.க. உறுதி செய்து விட்டதா? என ரகசியமாக விசாரித்திருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.