ADVERTISEMENT

’மோடி தமிழகத்துக்கு வரும்போது திமுக சார்பில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்’ -ஸ்டாலின்

09:07 PM Mar 30, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (30-03-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

ஸ்டாலின்: அண்மையில் ஈரோட்டில் நடந்து முடிந்த திராவிட முன்னேற்றக் கழக மண்டல மாநாட்டுக்கு பாடுபாட்டு, உழைத்து பணியாற்றிய கழக முன்னணியினருக்கு, கழக தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கின்ற தீர்மானமும், நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற தீர்மானமும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்ற தீர்மானமும், நேர்மையற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் நடத்திட வேண்டுமென்ற தீர்மானமும், மருத்துவ கல்வி மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும், காவிரி பிரச்ச்னையில் நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத மத்திய – மாநில அரசுகளை கண்டிக்கின்ற தீர்மானமும், நிறைவாக, காவிரி பிரச்சினையில் கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கின்ற மத்திய – மாநில அரசுகளை கண்டித்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை எந்தவகையில் நடத்துவது என வரும் 1 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒத்த கருத்துடைய கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, முடிவெடுத்து, அறிவிக்கும் அதிகாரத்தை செயல் தலைவர் என்றமுறையில் இந்த செயற்குழு அளித்து, 7 வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மொத்தம் 7 தீர்மானங்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்துக்கு வருகின்ற நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கறுப்பு கொடி காட்டுவதென்றும் முடிவு செய்திருக்கிறோம்.


செய்தியாளர்: தமிழக அரசின் சார்பில் வரும் 2 ஆம் தேதியன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?

ஸ்டாலின்: காலக்கெடு முடிவதற்கு முன்பாக, கடைசி நிமிடம் வரை ஓபிஎஸ், “பொறுங்கள் இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, பொறுங்கள் இன்னும் 3 நாட்கள் இருக்கிறது, இன்னும் ஒருநாள் இருக்கிறது, அரை நாள் இருக்கிறது, 29 ஆம் தேதிக்குள் நல்ல செய்தி வரும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, சாகும் நேரத்தில் “சங்கரா, சங்கரா” என்று சொல்வது போல, ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். நேற்றைக்கு அமைச்சரவையை கூட்டியிருக்கிறார்கள். அந்தக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் என்ன பேசினார்கள், என்ன முடிவெடுத்தார்கள் என்று ஒரு செய்தியாவது வந்திருக்கிறதா என்றால் இல்லை. உண்மையில் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், மத்திய அரசு இதனை செய்யவில்லை என்று கண்டித்து, தீர்மானம் போடும் தெம்பு, திராணி, நாகரிகம் இல்லை. காரணம் என்னவென்றால், ஊழல் செய்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி பறிபோய் விடக்கூடாது, மத்திய அரசு அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்து விடும் என்பதால், மண்டியிட்டு இந்த அரசு அடிமைபோல நடந்து கொண்டிருக்கிறது.


செய்தியாளர்: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்று தெரிந்தே ஆட்சியாளர்கள் நாடகம் நடத்துகிறார்களே?

ஸ்டாலின்: இதையே தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகிறோம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோதும் இதை குறிப்பிட்டோம். அனைத்து கட்சி கூட்டத்திலும் தெரிவித்தோம். இதெல்லாம் வெறும் கண் துடைப்புதான். பிரதமர் கண்டிப்பாக சந்திக்க மாட்டார். ஆகவே, இதை நிறைவேற்றப் போவதில்லை, என்று சட்டமன்றத்தில் நாங்கள் தெரிவித்தோம். அதுமட்டுமல்ல, தீர்மானத்தை நிறைவேற்றியபோது, உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் சட்டமன்றத்திலேயே தெரிவித்து இருக்கிறேன். ஆனால், அதற்கான முயற்சியில் இதுவரை அவர்கள் ஈடுபடவில்லை.


செய்தியாளர்: எல்லா எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வதெனில் நாங்களும் செய்வோம் என்று காங்கிரஸார் தெரிவித்து இருக்கிறார்களே?

ஸ்டாலின்: இதை நான் முன்பே தெரிவித்தேன். அதிமுக முன்வந்து, 50 எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால், எங்களுடைய 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவும் தயார். அதேபோல, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முன்வந்தால், அடுத்த நிமிடமே திமுகவின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம், என்றும் தெரிவித்தேன். ஆனால், அந்த துணிச்சல் ஆளுங்கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை.


செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான நீங்கள் பிரதமரை சந்திப்பீர்களா?

ஸ்டாலின்: இதற்காக பலமுறை நாங்கள் கடிதம் அனுப்பியும், ஒருமுறை கூட அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT