Skip to main content

பாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், கூட்டணி நீடிக்குமா? என்பதே அரசியல் ஹாட் டாபிக்.

 

dmk



நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் முட்டல் மோதல் வெடித்தன. தி.மு.க. மீதுள்ள அதிருப்தியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் கூட்டறிக்கை மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். இது, தி.மு.க.வில் கொந்தளிப்பை ஏற்படுத்த, "காங்கிரஸ் தலைமையின் அனுமதியில்லாமல் இப்படி பேச முடியாது' என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கட்சியின் சீனியர்கள் வலியுறுத்தியதையடுத்து, காங்கிரஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின்.

 

dmk



இந்த நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட கே.எஸ்.அழகிரியிடம் தேர்தலில் நடந்தது குறித்து விவாதித்தார் சோனியாகாந்தி. இதனைத் தொடர்ந்து பேசிய அழகிரி, "தி.மு.க.வும் காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்களாக இருக்கும். நாங்கள் கொடுத்தது அறிக்கையே அல்ல. கூட்டணியில் எந்த பிரிவும் கிடையாது' என்றார். ஆனாலும் இதை தி.மு.க. தலைமை ஏற்கவில்லை. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற துடிக்கிறது. அதனை நிரூபிப்பதுபோல, "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு பழைய நிலைக்குத் திரும்புமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்'' என தெரிவித்திருக்கிறார் கட்சியின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு.

 

dmk



கட்சியின் பொருளாளரான துரைமுருகன், "காங்கிரஸ் விலகிச்சென்றால் செல்லட்டும். அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. ஓட்டுகள் பாதிக்காது. இருந்தால் தானே பாதிக்கிறதுக்கு'' என கடுமையாகத் தாக்கினார். தி.மு.க. சீனியர்களின் இப்படிப் பட்ட கருத்துக்களால் அதிர்ச்சியடைந்துள்ளது காங்கிரஸ் மேலிடம். ஸ்டாலினின் அனுமதியுடன்தான் தி.மு.க. தலைவர்கள் அப்படிப் பேசுவதாக சோனியாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஸ்டாலினிடம் பேசும் தி.மு.க. மா.செ.க்கள், "காங்கிரசை கழட்டி விடுங்கள்' என அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றனர். இதனால், 21-ந்தேதி நடக்கும் தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரசுடனான கூட்டணி பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என அறிவாலயத் தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

 

dmk



இந்த நிலையில், கே.எஸ்.அழகிரியின் கருத்தறிய அவரை தொடர்புகொண்டபோது நமது அழைப்பை எடுக்கவில்லை. சிவகங்கை எம்.பி.யும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திடம் நாம் பேசியபோது, "இந்த ஞானம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கு முன் துரைமுருகனுக்கு ஏன் தோன்றவில்லை? தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம்''’ என்பதோடு முடித்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என பலரும், "தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறலாம். தி.மு.க.வுக்கு அடிமையாக நாம் இருக்க வேண்டியதில்லை' என மிக காட்டமாக சோனியாவுக்கும் ராகுலுக்கும் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.


இதுகுறித்து காங்கிரசின் முன்னாள் தலைவர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற நினைப்பது தி.மு.க.வின் அஜெண்டா இல்லை; அது, பா.ஜ.க.வின் அஜெண்டா. ஓரிரு மாதத்திற்கு முன்பு பா.ஜ.க. தலைமையிலிருந்து தி.மு.க. சீனியர் எம்.பி.க்கள் மூன்று பேருக்கு, "காங்கிரசை எதற்காக தூக்கிச் சுமக்கிறீர்கள்? காங்கிரசை கழட்டி விடுங்கள். பா.ஜ.க.வை கடுமையாக விமர்சிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டாம்' என்கிற தகவல்களை பாஸ் செய்தது.

பிரதமர் மோடியை சில மாதங்களுக்கு முன்பு டி.ஆர்.பாலு சந்தித்தபோதும் காங்கிரசுக்கு எதிரானவைகள் பேசப்பட்டிருக்கின்றன. அதன் எதிரொலிதான் இப்போது காங்கிரசுக்கு எதிராக மெல்ல மெல்ல வெடிக்கத் துவங்கியிருக்கிறது. தி.மு.க.வை விட்டால் எங்களுக்கு அ.தி.மு.க., தினகரனின் அ.ம.மு.க., ரஜினி, கமல் என கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆனா, தி.மு.க.வுக்கு? லோக்சபாவில் 38 இடங்களில் தி.மு.க. கூட்டணி ஜெயிக்க காங்கிரஸ்தான் முக்கிய காரணம். காங்கிரசை கழட்டிவிடுவதன் பலனை இனிவரும் தேர்தலில் தி.மு.க. உணரும்' என்கிறார் மிக காட்டமாக.


காங்கிரஸ் தலைவரின் இத்தகைய கருத்துக்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, "காங்கிரசுக்கு எதிரான தி.மு.க.வின் அதிருப்திக்கு பா.ஜ.க.தான் காரணம் என சொல்வது அபத்தம். கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதில் தி.மு.க.வுக்கு நிகர் வேறு எந்த கட்சியும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி துரோகமிழைத்தது காங்கிரஸ்தான். இதற்கு பல ஆதாரங்களை சுட்டிக்காட்ட முடியும். மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் அதிக சீட் வாங்க இப்படிப்பட்ட நாடகத்தை காங்கிரஸார் நடத்துகின்றனர். இதற்கு தி.மு.க. இடம் கொடுக்காது. தேவைப்பட்டால் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஸ்டாலின் தயங்கமாட்டார்'' என விவரிக்கிறார்கள்.


 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.