இதனிடையே, விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.
நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்தும், இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, பீகார் மாநில சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், பா.ஜ.க - 78, நிதிஷ்குமாரின் ஜே.டி.யூ - 45, ஹெச்.ஏ.எம்.எஸ் - 4 என நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 127 வாக்குகள் பெறப்பட்டன. மேலும், ஆர்.ஜே.டி -79, காங்கிரஸ் -19, இடதுசாரி - 16 என எதிர்க்கட்சிகளுக்கு 112 வாக்குகள் பெறப்பட்டன. இதன் மூலம், நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (02-03-24) பீகார் மாநிலத்துக்கு சென்றார். பீகாரின் அவுரங்கபாத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், “பிரதமர் மோடி பீகார் வந்ததற்காக அவரை நாங்கள் வரவேற்கிறோம். பீகார் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து வருவதால் முன்னேற்றங்களை அடைந்து வருகின்றன. பீகார் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன். பீகார் மக்கள் இப்போது பொருளாதார ரீதியாக அதிக அதிகாரம் பெற்றவர்களாக உணருவார்கள். வரும் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இனி நான் எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன். நான் உங்களுடன் தான் இருப்பேன். வேறு எங்கேயும் செல்லமாட்டேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறினார். அப்போது பிரதமர் வாய்விட்டுச் சிரித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.