பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த வழக்கு - செப்.15ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கு, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், குருகிராம் பகுதியில் உள்ள ஒரு சர்வதேச பள்ளி கழிவறையில், இரண்டாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தான். விசாரணையில், அந்த மாணவன் செல்லும் பள்ளிவாகன நடத்துனரின் பாலியல் வன்புணர்வுக்கு ஒத்துக்கொள்ளாமல் போனதால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் மிகப்பெரிய முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்குப் பின், பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என இரண்டு பெண் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கொல்லப்பட்ட சிறுவனின் தந்தையும் இதே கோரிக்கையுடன் கூடிய மனு கொடுத்துள்ளார். எனவே, வழக்கறிஞர்கள் அபா அர்மா, சங்கீதா பாரதி ஆகியோர் தொடுத்துள்ள வழக்கை, இறந்த சிறுவனின் தந்தை தொடுத்துள்ள வழக்குடன் இணைத்துக்கொள்வதாகவும், இந்த வழக்கு குறித்த விசாரணை செப்டம்பர் 15ஆம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
- ச.ப.மதிவாணன்