Skip to main content

கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதம் வாங்கினேன்னு உனக்குத் தெரியுமா? அதிர வைத்த இளம்பெண்ணின் சம்பவம்!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

இல்ல தினேஷ், நீ முன்ன மாதிரி இல்லை. நெறைய தப்பு பண்றே. குடி, சிகரெட், பொண்ணுக...ன்னு நீ இந்த உலகத்துல இருக்கற எல்லா தப்பையும் பண்ண ஆரம்பிச்சுட்டே. இந்த ஆறு வருஷமா உன்னைய லவ் பண்ணினதை நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்குது. இந்த நிலைமையில நான் எப்படி உன்னைய கல்யாணம் பண்றது? அப்படி கல்யாணம் பண்ணாலும் நல்லா வாழமுடியும்ங்கற நம்பிக்கை எனக்கு இல்லை.
 

incident



உன்மேல இருக்கற காதலால எங்க அம்மாவை எப்படியெல்லாம் சமாதானப்படுத்தி, நாம கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கினேன்னு உனக்குத் தெரியுமா? எல்லாம் வீணாப் போச்சு. நான் உன்னைய மறக்கறது ரொம்ப கஷ்டம். எப்படி மறப்பனோ... எனக்கே தெரியல. ஆனாலும் நாம பிரியறதுதான் உனக்கும் சரி... எனக்கும் சரி... ரொம்ப நல்லது'' என கோவை கீரநத்தம் கல்லுக்குழி அருகே வசிக்கும் நந்தினி தனது காதலன் தினேஷிடம் கண்ணீர் முட்ட சொல்லிக் கொண்டு பஸ் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டார்.

தினேஷோ, நந்தினி படிக்கும் கல்லூரி வாசலில் நின்றுகொண்டு .வெளியே வரும் நந்தினியை மறித்து, "என்னைய கல்யாணம் பண்ணியே ஆகோணும். இல்லைன்னா உன்னைய கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்... இது சத்தியம்'' என தொடர்ந்து மிரட்டினான். சட்டை செய்யவில்லை நந்தினி. கடந்த பிப்ரவரி 28-ந் தேதி மாலை கீரநத்தம் பகுதியில் உள்ள மதுக் கடை ஒன்றில் மது அருந்திவிட்டு தனது டூ வீலரை எடுத்துக்கொண்டு கோபம் கொந்தளிக்க நந்தினி வீட்டுமுன் பைக்கை மௌனமாக்கினான் தினேஷ். நந்தினி மட்டுமே வீட்டிலிருப்பதை உறுதி செய்து கொண்டு அவன் வீட்டிற்குள் நுழைந்தான்.

"நந்தினி... நான் வெறிகொண்டு இருக்கறேன். என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு... அய்யோ சொல்லு...'' என அவன் ஒரு சைக்கோவாய் மாறி கத்தி நிற்பதை அறியாத நந்தினி, "நீ எத்தனை முறை கேட்டாலும் நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கறதுக்கு... பேசாம தூக்குப்போட்டு செத்துப் போயிரலாம்னுதான் சொல்லுவேன்'' என்றாள்.

 

incident



"தெரியுண்டீ நீ இப்படித்தான் சொல்லுவேன்னு?'' என சொல்லிக் கொண்டே வீட்டில் இருந்த சேரை எடுத்து நந்தினியின் தலையில் அடித்தான். ரத்தம் சொட்ட கீழேவிழுந்த அவள் எந்திரிக்க முயல... துப்பட்டாவில் நந்தினியின் கழுத்தை நெரித்த தினேஷ், தனது பேண்ட் பாக்கெட்டில் கலக்கி வைத்திருந்த சாணிப்பவுடரை பாட்டிலில் இருந்து நந்தினியின் வாயில் ஊற்றினான்.

வெறி பிடித்த அவன் "சாகுடி... எனக்கு இல்லாத நீ எவனுக்கும் கெடைக்கக்கூடாது''என வீட்டை விட்டு வெளியேறினான்.

வேலைக்குப் போயிருந்த நந்தினியின் அம்மா ராமாத்தாள் வீட்டுக்கு வந்தபோது... மயங்கிக் கிடந்த தனது மகளை பதறியடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனார். அடுத்த நான்குமணி நேரங்களில் அதே அரசு ஆஸ்பத்திரியில் சாணிப்பவுடர் குடித்துவிட்டதாக அட்மிட் செய்யப்பட்டான் தினேஷ்.


அதற்கடுத்த நாள் பிப்ரவரி 29-ந் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி இறந்துபோனாள் நந்தினி.

அதற்குப் பின்னால் நந்தினியின் உறவினர்கள் முன் அழுத நந்தினியின் அப்பா முருகனும், அம்மா ராமாத்தாளும்... "எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வச்சோம் எங்க பொண்ண. நந்தினியை இப்படி நாசம் பண்ணிட்டானே படுபாவி. இனி இந்த உலகத்துல எங்களுக்குன்னு யாரு இருக்கறா..?'' என ஒத்த புள்ளையை பறிகொடுத்த ஏக்கத்தோடு அவர்கள் அழுததை அங்கிருந்த யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.


நந்தினி கொலையை விசாரிக்கும் கோவில்பாளையம் போலீசாரிடம் நாம் பேசியபோது, "அந்த தினேஷ் சரியான ஆள் இல்லை. இந்த 21 வயசுலயே எப்படி எல்லாம் யோசிக்கிறானுக பாருங்க. அவனுக்கு நந்தினிமேல உண்மையான காதல் இருந்திருந்தா அந்தப் பொண்ண அடிச்சு சாணிப் பவுடரை குடிக்க வச்சபோதே... அவனும் அந்த இடத்துலயே சாணிப்பவுடரை குடிச்சிருக்கலாம். ஆனா நாலுமணி நேரம் கழிச்சு... லைட்டா சாணிப்பவுடரை வாயில தேய்ச்சுட்டு வந்து, சாணிப்பவுடர் குடிச்சதா நாடகமாடி ஆஸ்பத்திரியில படுத்திட்டு இருக்கான் என்றார்கள்.

"காதல் கசிந்து கண்ணீர் மிகுந்து அழுவதெல்லாம் பழைய கதை. இப்போதெல்லாம் காதல் கசந்தால் சாணிப்பவுடரில் கொல்லலாம்' ...என நந்தினியைக் கொன்று புதிய தத்துவத்தை எழுதியிருக்கிறான் சைக்கோ தினேஷ்.


 

 

சார்ந்த செய்திகள்