Skip to main content

       கூல்டிரிங்ஸ் என்று  7 up பாட்டிலில் இருந்த மண்ணெண்ணை குடித்த குழந்தை பலி

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 

நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவி நகரைச் சேர்ந்த மைதீன் பிச்சையின் மகள் ஷகிலா பானு (25). இவருக்கும் அந்தப் பகுதியிலுள்ள சம்பன்குளத்தில் வசிக்கும் முஸ்தபா (30) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

 

a

 

இதனிடையே ஷகிலா பானுவிற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதன் காரணமாக அவர் சேரன்மகாதேவியிலிருக்கும் தன் தாய் வீட்டில் தங்கியிருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் 7up குளிர்பான பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை ஒன்றரை வயது குழந்தை ஆஷிகா தவறுதலாக குளிர்பானம் என்று நினைத்து குடித்துள்ளார்.

 

குடித்த மண்ணெண்ணை மூக்குவழியாகவும் சென்றிருக்கிறது என்று சொல்லப் படுகிறது. இதனால் மயக்கமடைந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காததால் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தையின் உயிர் பிரிந்தது.

இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

ஆபத்தானவைகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும் என்கிற விழிப்புணர்வு பிரச்சாரமும் ஒரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சார்ந்த செய்திகள்