Skip to main content

தேர்தலின்போது நடந்த கொள்ளை சம்பவம்..! பிடிபட்டவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..! 

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Election robbery incident


2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது பணப்பட்டுவாடாவைக் கட்டுப்படுத்த பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் அச்சோதனைகளை மீறியும் பணம் கைமாற்றப்பட்டது. அதில், கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதி சோதனைச் சாவடியில் ஒரு காரில் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்ட பலகோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. 

 

இந்த விவகாரத்தில், இதுவரை 6க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சாமிரவி (42) என்பது தெரியவந்தது. 

 

ஆனால், சாமிரவி தலைமறைவாக இருந்துவந்தார். அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர் அருப்புகோட்டை பகுதியில் மறைந்திருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கே.கே.நகர் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைந்தனர்.

 

அதேபோல், தில்லைநகர், மணிகண்டம், ஜீயபுரம், கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இவர்மீது வழக்குகள் உள்ளதால், அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சாமிரவியை காவல்துறை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்