கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. கார் நிறுத்தும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கண்களில் கண்ணீர் தழும்ப அழுது கொண்டு 14 வயது சிறுமி ஒருவர் நின்றுள்ளார். அப்போது அவசரமாக மாடி படியிலிருந்து இறங்கி வந்த எஸ்.பி. ராஜாராம் அவரது காரில் உட்கார்ந்த பிறகு அந்த சிறுமியை கவனித்துள்ளார். சிறுமியின் கண்களில் தண்ணீர் வழிய, அவர் காரை விட்டு இறங்கி சிறுமியிடம் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி கூறிய தகவலைகேட்டு எஸ்.பி.ராஜாராம் அதிர்ச்சியானார். அந்த சிறுமி,‘எங்க அப்பா இங்க தான் ஆயுதப்படையில் வேலை பார்க்கிறார். அவருக்கு 45 வயது. என்னிடம் தவறான முறையில் உடல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார். என்னால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுங்கள்” என கெஞ்சியுள்ளார். மேலும் அந்த சிறுமி கடலூர் நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிப்பதாகவும். கடந்த சில மாதங்களாக இது போன்று அவர் நடந்து கொள்வதாகவும் இதனை யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியாமல் இங்கு வந்து நின்றதாகவும் அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதனால் அப்செட் ஆன எஸ்.பி. ராஜாராம் உடனடியாக கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகாவை அழைத்து இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த மகளிர் காவல் துறை சம்பவம் உண்மை என உறுதிப்படுத்தி சனிக்கிழமை இரவு சம்பந்தப்பட்ட ஆயுதப்படை காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய காவல்துறையச் சேர்ந்த ஒருவரே பெற்ற மகளிடம் இது போன்று நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.