Skip to main content

சிறைக்கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு; போராடத் தயாராகும் உறவினர்கள்!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
jail inmate passed away in hospital in pudukkottai

சிறைக்கைதி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊரைச்சேர்ந்த மாங்குட்டிப்பட்டி ராஜாக்கண்ணு மகன் வெங்கடேசன் (40). இவர் அதே ஊரில் டாஸ்மாக் கடையுடன் உள்ள பாரில் வேலை செய்து வருகிறார். விடுமுறை நாட்களில் மது விற்பனை செய்ததாக இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் கடை விடுமுறை நாளன்று மது விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான தகவல் போலீசாருக்கு தெரியவர, மதுவிலக்குப் பிரிவு போலீசார் வெங்கடேசனை கைது செய்ததோடு, 500 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த இவருக்கு 4 ந் தேதி காலை திடீரென உடல்நலக்குறைவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைக் காவலர்கள் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 5 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் உடல் ஆரோக்கியத்துடன சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் திடீர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அதனால் இறப்பிற்கு சரியான காரணம் தெரியும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறும் உறவினர்கள் போராட்டங்கள் செய்யவும் உள்ளதாக கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்