மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற வயதுக்குவந்தோர் கைது செய்யப்படுவர்' என்கிற அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை அமெரிக்க அரசியலில் மேலும் சர்ச்சை புயலை கிளப்பியுள்ளது. இப்படி கைதாகின்றவர்களின் குழந்தைகள் அவர்களது பெற்றோரின் பராமரிப்பில் இருந்து அகற்றப்பட்டு விடுகின்றனர்.
எல்லையை கடந்தகாக வயதுவந்தோர் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகிறபோது, அவர்களோடு வருகின்ற குழந்தைகள் பிரிக்கப்பட்டு, ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த நடவடிக்கையால் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோர் குற்றவியல் நடைமுறையில் தண்டிக்கப்படுகின்றனர். சட்ட விரேதமாக எல்லையை கடந்து அமெரிக்காவில் நுழைவது முதல்முறையாக இருந்தால், அதனை தவறான நடத்தை குற்றச்சாட்டாக கருதப்பட்ட நீண்டகால கொள்கையிலிருந்து இந்த நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டதாகும்.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த கொள்கையை குடியரசு கட்சியை சோந்த சிலர் ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர். இந்த நடவடிக்கையை தான் விரும்பவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ராயன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெற்றோரையும், குழந்தைகளையும் பிரிக்கின்ற நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருகின்ற குடிவரவு சட்ட வரைவை குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். அதிபர் இதற்கு ஆதரவு அளிப்பார் என்று குடியரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், இத்தகைய சமரச சட்ட வரைவில் தான் கையெழுத்திடப்போவதில்லை என்று வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார். கடந்த 6 வாரங்களில் மட்டுமே 2000 குழந்தைகள் பிரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.