Skip to main content

தேடிப் போய் மு.க.அழகிரியைச் சந்தித்த ரஜினி!

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

இத்தனை வருடங்கள் என்னை நம்பியிருக்கும் ரசிகர்களை ஏமாற்றமாட்டேன். சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத்  தயாராக இருக்கிறேன், கட்சிப் பெயரையும் அப்போது அறிவிக்கிறேன்.''ஏப்.18-ஆம் தேதி ஓட்டுப் போட்டுவிட்டு ஏப்ரல் 19-ல், இப்படி ஒரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டு விட்டு, "தர்பார்'’ஷூட்டிங்கிற்காக மும்பை பறந்துவிட்டார் ரஜினி. தனது தம்பி ரஜினியின் அரசியல் பயணம் வெற்றி பெறுவதற்காக, தமிழகத்தில் இருக்கும் முக்கிய கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வரும் அண்ணன் சத்தியநாராயண ராவ்வும் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்பதை ஓங்கி அடித்துச் சொல்கிறார். 

 

rajini



மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து, ஒரு வருடம் கழித்து வந்த எம்.பி. தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கிய கமல்ஹாசன் பல தொகுதிகளில் தடுமாறத்தான் செய்தார். இடைத்தேர்தல் நடைபெறும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.நீ.ம. களமிறங்கியது. ஆனால் ரஜினியோ சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததும் கட்சிப் பெயரை அறிவிக்கிறேன் என்கிறார். இந்தளவுக்கு ரஜினி உறுதியாகவும் கறாராகவும் இருப்பதன் பின்னணி குறித்து ரஜினி ஏரியாவில் விசாரித்தோம். 

 

alagiri rajini



"கமல் கட்சிக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பது மே.23-ஆம் தேதி தெரிந்துவிடும். அந்த ரிசல்டைப் பார்த்துவிட்டுத் தான் எங்கள் தலைவர் அடுத்த ஸ்டெப்பை வைப்பார். மேலும் டெல்லியில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தையும் உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப சில முடிவுகளை எடுப்பார். கமல் கட்சிக்கு மேல்தட்டு வர்க்கத்தில்தான் ஆதரவு உள்ளது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை அடித்தட்டு மக்களைக் கவரவேண்டும் என்பதுதான் முக்கியம். அதுதான் தேர்தல் களத்தில் சப்போர்ட்டாக இருக்கும்.  தேர்தல் கள வேலைகளில் முன்அனுபவம் உள்ளவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் எங்கள் தலைவர். அதனால் மு.க.அழகிரி எங்கள் தலைவருடன் கரம் கோர்ப்பது நிச்சயம். மதுரையில் பிரம்மாண்டமான அரசியல் மாநாட்டை நடத்தும் அளவுக்கு அழகிரியுடன் பேசியிருக்கிறார் எங்கள் தலைவர்'' என்கிறது ரஜினிக்கு நெருக்கமான நட்பு வட்டம். 

 

rajini



மதுரையில் அழகிரி ஏரியாவில் நமது விசாரணையைத் தொடர்ந்த போதும் இதை உறுதிப்படுத்தினார்கள். "கலைஞர் உடல்நலம் சரியில்லாமல் காவேரி ஆஸ்பத்திரியில் இருந்த போது, நலன் விசாரிக்க வந்ததுடன்... தேடிப் போய் அண்ணன் அழகிரியைச் சந்தித்தார் ரஜினி. தலைவர் மறைந்த பின் கோபாலபுரத்திலும் ராஜாஜி ஹாலிலும் நடந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். இப்போது பி.எம்.மன்னனைத் தவிர, வேறு யாரும் அழகிரியுடன் இல்லை. தி.மு.க.வில் மீண்டும் சேர்வாரா அல்லது சேர்த்துக்கொள்வார்களா என்பதும் தெரியல. அதனால் விரக்தி மனநிலையில் இருக்கும் அழகிரிக்கு அடுத்த அடியாக துரை தயாநிதியின் சொத்துக்களை முடக்கும் நீதிமன்ற உத்தரவு வந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையை ரஜினியிடம் மனம்விட்டுப் பேசினார் அழகிரி. என்ன நடந்ததோ ஏது நடந்ததோ, சமீபத்தில் சென்னைக்குப் போய், அரசியல் ஏரியாவில் செல்வாக்குடன் இருக்கும் அந்த ஆடிட்டரை சந்தித்தார்.  ஏற்கனவே ஆளுங் கட்சியில் பிரிந்திருந்தவர்களை ஒட்டவைப்பதில் வெற்றி பெற்றிருக்கும் அந்த ஆடிட்டரோ, "எல்லாத்தையும் ரெகவர் பண்றதுக்கு நானாச்சு, ஒரே ஒரு கண்டிஷன். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது, அவருக்கு பக்கபலமா நீங்க இருங்க. மத்ததெல்லாம் தானா நடக்கும்'' என கொக்கியைப் போட்டுள்ளார். அழகிரியும் டபுள் ஓ.கே. சொல்லிவிட்டார். இப்போது கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் அழகிரியைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் அந்த ஆடிட்டர். அதனால் ரஜினியுடன் அழகிரி கைகோர்ப்பார்'' என உறுதியாகச் சொல்கிறார் அழகிரி முகாமைச் சேர்ந்த ஒருவர். 

கடந்த வாரம் மதுரையில் நடந்த மங்கல நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசிய அழகிரியின் வலதுகரமான பி.எம்.மன்னன், “ஏம்பா எங்க அண்ணனும் உங்க தலைவரும் கூட்டுசேரப் போறாங்கப்பா''’என உற்சாகமாக பேசியிருக்கிறார். ஜூன் முதல் வாரம் வரை தர்பார் ஷூட்டிங்கிற்காக மும்பையில் இருக்கிறார் ரஜினி. அதனால் மே.23-க்குப் பிறகு, மும்பை சென்று ரஜினியை சந்திக்கும் ஐடியாவில் உள்ளாராம் அழகிரி.  இதற்கிடையே ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமையில் நடந்த ஏகப்பட்ட குளறுபடிகளால், எல்லாப் பணிகளும் அப்படியே முடங்கிவிட்டதாம். மதுரை மாவட்ட ர.ம.ம.வின் மகளிரணி, இளைஞரணியைக் கலைத்துவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க ராகவேந்திரா மண்டபத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாம். இப்படிப்பட்ட குளறுபடிகளை சரி செய்வதற்காக,  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விலக்கி வைக்கப்பட்டிருந்த ராஜூ மகாலிங்கம் மீண்டும் ர.ம.ம.வில் எண்ட்ரியாகிறார். ஜூலை மாதத்தில் அனைத்து நிர்வாகிகளையும் ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கிறார் ரஜினி. அப்போது தெரியும் அவரின் அரசியல் மனநிலை.
 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.