எனக்காக யாராவது உதவி செய்ய வருவார்கள்; நிச்சயம் நானும் நீட் பயிற்சிக்கு போவேன். தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க போவேன் என்ற நம்பிக்கை அந்த மாணவனுக்குள் தெரிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள பாநாதாங்குளம் பகுதியில் சின்ன வயதிலேயே தன் தந்தையை இழந்து தாத்தா- பாட்டி, அம்மா, தங்கையுடன் வசிக்கும் ஷேக் அப்துல்லா (வயது 17). பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையும், பேராவூரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண் பெற்ற போது, அங்குள்ள பல தனியார் பள்ளிகள் மாணவன் சேக் அப்துல்லா வீடுக்கு போய் +1, +2 படிக்க எங்கள் பள்ளியில் கட்டணம் வேண்டாம் என்ற போது நான் அரசுப் பள்ளியிலேயே படிக்கிறேன் என்று மாணவன் பதமாக சொன்ன போது உறவுகள் வந்து நல்லா படிக்கிற பையனை தனியார்ல படிக்க வைக்கலாம்ல என்று சொல்ல.. எங்க புள்ள எங்க படிச்சாலும் நல்லா படிப்பான் தனியார்ல படிக்க பணம் வேணும். இங்க ஒவ்வொரு நாள் வாழ்க்கை ஓட்டவே சிரமமாக இருக்கு என்றனர் தாத்தா- பாட்டியும் அம்மாவும்.
நடப்பு ஆண்டு +2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளியில் படித்து 538 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் தான் சின்ன வயசு கனவு மட்டுமின்றி தன்னை வளர்க்கும் தாத்தா- பாட்டியின் ஆசையுமான மருத்துவர் ஆக வேண்டும் என்பது நீட் தடை போட்டது. தற்போது தனியார் நீட் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் பணம் தேவைப்படும். ஆனால் புயலில் கிழிந்த தென்னங்கீற்றுகளைக் கூட மாற்ற வழியின்றி நிவாரணம் கொடுத்த தார்பாலின் போட்டு மூடிய வீட்டில் தார்பாலின் கிழிஞ்சுடுச்சு மாற்று தார்பாலின் கூட வாங்க முடியல எப்படி ஒரு லட்சம் கட்டி படிக்கிறது.
அதனால யாராவது நல்ல உள்ளங்கள் உதவினால் படிக்கிறேன். இல்லையென்றால் எங்காவது கூலி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றுவேன் என்கிறார் மாணவன் சேக் அப்துல்லா. இது போன்ற மாணவர்களுக்காக உதவி செய்ய எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள். அந்த நல்ல உள்ளங்கள் நிச்சயம் உதவி செய்து மாணவனின் கனவை நினைவாக்குவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.