Skip to main content

நீட் தேர்வால் பலியான மேட்டூர் மாணவன்! சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

 

neet exam salem student incident


மேட்டூர் அருகே, கடைசி வாய்ப்பிலும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மருத்துவர் ஆகும் கனவு கானல் நீராகி விடுமோ என்ற மன அழுத்தத்தால், விவசாயியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவகுமார். விவசாயி. இவருடைய மகன் தனுஷ் (வயது 19). மேட்டூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2019- ஆம் ஆண்டு பிளஸ்2 முடித்தார். 

 

எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த தனுஷ், மருத்துவர் ஆவதுதான் தனது ஒரே லட்சியம் என்று சொல்லி வந்துள்ளார். இதையடுத்து, எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார். 

 

கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தோல்வி அடைந்திருந்தார். அதனால் ஏமாற்றம் அடைந்த தனுஷ், மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பாக நடக்கும் நீட் தேர்வுக்காக கடுமையாக படித்து வந்தார்.

 

இந்த நிலையில்தான் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 13) நீட் தேர்வு நடந்தது. தனுஷூக்கு மேச்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, அதற்கான நுழைவுச் சீட்டும் வழங்கப்பட்டது. 

 

இது ஒருபுறம் இருக்க, ''நீட் தேர்வு எழுத இதுதான் கடைசி வாய்ப்பு. இதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மருத்துவர் ஆகும் கனவு கானல் நீராகி விடும். இதுவரை நான் கண்ட கனவெல்லாம் ஒரே நாளில் தகர்ந்து விடும்,'' என்று நண்பர்களிடம் தனுஷ் அடிக்கடி புலம்பி வந்துள்ளார். 

 

தேர்வுக்காக சனிக்கிழமை இரவு நீண்ட நேரம் தனுஷ் தனி அறையில் படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருடைய தாயார் எழுந்து சென்று தனுஷின் அறையில் பார்த்தபோது அங்கு, மகன் தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதார். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல்  காவல்நிலைய காவல்துறையினர், சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

விசாரணையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், மருத்துவர் ஆகும் கனவு பொய்த்துப் போய் விடுமோ என்ற விரக்தியில் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

 

மாணவனின் மரணத்தால் கூழையூர் கிராமமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நீட் தேர்வு முதன்முதலில் நடந்த ஆண்டில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது. இதுவரை நீட் தேர்வின் மீதான அச்சத்தால் தமிழகத்தில் 15- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.