Skip to main content

பணபலத்தால் வெற்றியைத் தடுக்க முடியாது! தீர்ப்பை மக்கள் எழுதிவிட்டார்கள்! - மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!

Published on 31/03/2021 | Edited on 01/04/2021
ddd

 

"ஸ்டாலின்தான் வாராரு... விடியல்தரப் போறாரு...' என்ற பாடலுடன் முதல்வர் வேட்பாளராக தமிழகம் முழுவதும் பயணித்து பரப்புரை செய்துவருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். சவாலான இந்த தேர்தல் களத்தில் அவரிடம் நக்கீரன் முன்வைத்த கேள்விகள்...

 

உங்கள் பரப்புரையில் மக்கள் கூட்டமும் எழுச்சியான ஆரவாரமும் புதிதல்ல. ஆனால் 2016-ல் தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையவில்லை. தற்போதைய தேர்தல் களத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அ.தி.மு.க.வை நிராகரிக்க -முதலமைச்சர் பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப "நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா' என்பதுபோல் மக்கள் போகுமிட மெல்லாம் ஆர்ப்பரித்து அலை அலையாக வருகிறார்கள். பத்தாண்டுகள் தமிழகத்தைப் பாழ்படுத்தி -கடைசி நான்கு ஆண்டுகள் ஊழலில் மூழ்கி -பொய் ஒன்றையே மூலதனமாக வைத்துப் பிரச்சாரம் செய்துவந்த அ.தி.மு.க.வின் அமைச்சர்களுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் காட்சிகள் தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்கு வேட்டுவைத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. தமிழக மக்களின் உரிமைகளை மத்திய பா.ஜ.க.விடம் அடமானம் வைத்தது அ.தி.மு.க. ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எங்கும் எதிலும் ஊழல். எல்லாவற்றிலும் கமிஷன் என்பது மட்டுமே இந்த நான்கு வருடத்தில் பழனிச்சாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் செய்த காரியம். கொள்ளையடித்ததில் கொந்தளித்துப் போயிருக்கும் மக்கள், அ.தி.மு.க.விற்கு விடை கொடுக்கும் தீர்ப்பை எழுதிவிட்டார்கள். அதை தங்கள் வாக்குரிமை மூலம் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் ஆளுங்கட்சி மீது அதிருப்தி இல்லை -எதிர்ப்பலை வீசவில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கும் கருத்தை தி.மு.க. எப்படி எதிர்கொள்கிறது?

 

அது பொய்ப் பிரச்சாரம். "அதிருப்தி' எதிர்ப்பு அலையாக இல்லை, சுனாமியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.-பா.ஜ.க. ஆகிய இரு கட்சி ஆட்சிகளுமே தமிழக மக்களை வஞ்சிக்கின்றன. அ.தி.மு.க.வின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் பா.ஜ.க. அரசு உள்நோக்கத்துடன் அமைதி காக்கிறது. தலைமைச் செயலகத்தில் நடத்திய ரெய்டு, அமைச்சர்கள் வீடுகளில் நடத்திய ரெய்டு உள்ளிட்ட பல்வேறு சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை நடவடிக்கைகளை மூட்டைகட்டி மூலையில் வைத்து -தங்களின் மதவெறி அஜெண்டாவை செயல்படுத்த, அண்ணாவின் பெயரில் உள்ள அ.தி.மு.க.வைப் பயன் படுத்துகிறது பா.ஜ.க. இப்போது ஏறக்குறைய அ.தி.மு.க.வும்- பா.ஜ.க.வும் ஒரே கட்சி -ஒரே மாதிரி ஆடைகளை உடுத்தியிருக்கும் கட்சிகள் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆகவே பாராளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் -அதாவது "234 அவுட் ஆப் 234' என்று தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றிபெறும்.

 

மத்திய ஆளுங்கட்சி -மாநில ஆளுங்கட்சி இரண்டும் சேர்ந்த கூட்டணி என்பது அதிகார பலம் மிக்கது. நீங்கள் ஏற்கனவே கூறியுள்ளதுபோல, "தி.மு.கவை எளிதாக வெற்றிபெற விடமாட்டார்கள்' என்ற நிலையில், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க.வின் கூட்டணியின் வெற்றியை எப்படி உறுதி செய்வீர்கள்?

 

சிங்கிள் டீ குடித்துவிட்டு பிரச்சாரம் செய்யும் தொண்டர்படை தி.மு.க.விடம் இருக்கிறது. தி.மு.க.வுடன் கொள்கைரீதியாக இணைந்துள்ள கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் இருக்கிறார்கள். எங்களை ஆதரிக்க தமிழக மக்கள் இருக்கிறார்கள். ஆகவே எந்த அதிகார பலத்தையும் சந்தித்து தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் மாபெரும் வெற்றிபெறும். அந்த வெற்றியைத் தடுக்க முடியாது. ஏனென்றால் இது தேர்தல் நடத்தை அமலில் உள்ள காலம். ஆகவே தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை ஜனநாயக பேரியக்கமான தி.மு.க.விற்கு இருக்கிறது.

 

முந்தைய தேர்தல்களைவிட இப்போது பெண்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு அதிகரித்திருக்கிறது. அதனை வாக்குகளாக மாற்றும் வகையில் தி.மு.க.விடம் பெண்களுக்கான அமைப்புகள் பலமாக இருக்கின்றனவா?

 

தி.மு.க.விற்கு தாய்மார்களின் ஆதரவும் -அனைத்துத் தரப்பு வாக்காளர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது. அறுவடை செய்யும்போது சிந்தாமல் சிதறாமல், தேவையான பாதுகாப்புடன், நெல்மணிகளை வீடு கொண்டுவந்து சேர்ப்பதுபோல் -தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் வாக்குச்சாவடிக்கு கொண்டுவந்து சேர்க் கும் பலம் தி.மு.க.வின் மகளிர் அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் இருக்கிறது.

 

வாரிசு அரசியல், தி.மு.க. நிர்வாகிகளின் அத்துமீறிய செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆளுந்தரப்பு செய்யும் தேர்தல் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை எதிர்கொள்ள என்னசெய்யப் போகிறீர்கள்?

 

பத்து வருடம் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க. அப்போது நக்கீரன் தாக்கப்பட்டது, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசியது, இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்று தாக்கியது, வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டது, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமிக்கு ஆபாச நடனம் போட்டு வரவேற்பு கொடுத்து அவரைத் தாக்க முயற்சித்தது, நேர்மையான உயர்நீதிமன்ற நீதியரசர் சீனிவாசன் வீட்டில் மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தது, வேளாண் கல்லூரியைச் சார்ந்த மூன்று மாணவிகளை தருமபுரியில் உயிரோடு கொளுத்தியது இவை எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியின் வன்முறை வெறியாட்டங்கள். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி... ""அண்ணா விட்டுருங்க'' என்று கதறினார்களே -அந்தக் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டது யார்? அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்தானே! ஆகவே தங்களின் வன்முறையை -அராஜகத்தை -கொடநாட்டுக் கொலை கொள்ளைகளை மறைக்க தி.மு.க. மீது ஒரு பொய்ப் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள். வன்முறை வெறியாட்டங்களின் ஒட்டுமொத்த உருவம் அ.தி.மு.க. ஆட்சிதான். அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்பவில்லை. வெற்று விளம்பரங்களும் மக்களிடம் எடுபடாது.

 

ஆட்சியாளர்கள் கஜானாவைக் காலி செய்துவிட்டார்கள் -கடன் சுமையை ஏற்றிவிட்டார்கள் என்று நீங்கள் குற்றம்சாட்டும் நிலையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்?

 

"கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷனுக்கு' முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதிகள், படிப்படியாக -காலநிரல்படி நிறைவேற்றப்படும். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை ஒரு புனிதநூலாகப் பார்க்கிறது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த நேரங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதியை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நிறைவேற்றி யிருக்கிறார்கள். அவர்களின் வழியில் வந்துள்ள நான், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

 

மேற்குவங்கத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளின் செல்வாக்குச் சரிவினால், அங்கே பா.ஜ.க. தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டது. தமிழகத்தில் அ.தி.மு.க. பலவீனமடைந்தால், அரசியலில் அதற்குரிய இடத்தை மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க. எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதே?

 

என்னைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க.- அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் ஒரே கட்சியாகத்தான் பார்க்கிறேன். ஓருயிர் ஈருடல் போல்தான் முதலமைச்சர் பழனிசாமி இந்த நான்காண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கிறார். ஆகவே அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்பதே இப்போதுள்ள முதல் இலக்கு; தமிழக மக்கள் அதில் பேரார்வம் காட்டுகிறார்கள். ஆகவே அண்ணா பெயரில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த, அ.தி.மு.க.வைப் பற்றி அக்கட்சியின் தொண்டர்கள்தான் கவலைப்பட வேண்டும்.

 

எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றத்தை தி.மு.க. விரும்புகிறதா? அது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதா?

 

சட்டமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள கட்சி தி.மு.க. ""தன்னந்தனியாக சட்டமன்றத்தில் நின்று உரையாற்றினேன்'' என்று மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களே பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு முழு சுதந்திரமும் வாய்ப்பும் வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் வந்துள்ள நான் நிச்சயமாக, எதிர்க்கட்சிகள் இருக்கவேண்டும்; அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொல்லவேண் டும் என்றுதான் விரும்புவேன். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல -ஆளுங்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி பொறுப்புள்ள அரசாக செயல்படுவதற்கும் ஏற்றவகையில் அமையும். சிறிய கட்சிகள் குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை கூறியதுபோல், ""எங்களை வழிநடத்திச் செல்ல அவர்களும் வந்திருக்கிறார்கள்'' என்று கருதி -அவர்களுக்கு முழு வாய்ப்பு கொடுத்து -அ.தி.மு.க. ஆட்சியில் "கடுகு'போல் சிறுத்துப்போன சட்டமன்ற ஜனநாயகத்தை மீட்டெடுப்பேன். அதனால்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிக நாட்கள் சட்டமன்றக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் -சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

 

200+தொகுதிகள் இலக்கு என்றால், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும் வகையில் தி.மு.க.வினரின் களப்பணிகளை விரைவுபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

 

தி.மு.க.வினரும், கூட்டணிக் கட்சியினரும் நகமும் சதையும்போல் தேர்தல் களத்தில் இணைந்து நிற்கிறார்கள். ஊழல் அ.தி.மு.க. ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதிலும், மதவெறி பா.ஜ.க., ஊழல் அ.தி.மு.க.வின் தோளில் அமர்ந்து தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்பதிலும் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் ஒருமுகமாக நின்று தீர்மானமாகப் போராடிவருகின்றன.

 

கருத்துக்கணிப்புகளைக் கடந்து, கடைசிநேர பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடியவை. அதனை எதிர்கொள்ள தி.மு.க.வின் திட்டம் என்ன?

 

தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் பண விநியோகத்தையும் உன்னிப்புடன் கவனிக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவிற்கு மாநில அரசு அதிகாரிகள் யாரும் துணை போகமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்போதே பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்னுடன் பேசி, "நாங்கள் நடுநிலையாகச் செயல்படுவோம்; அ.தி.மு.க.வின் பண விநியோகத்திற்கு துணை போகமாட்டோம்' என்று உறுதி கூறிவருகிறார்கள். அ.தி.மு.க.வின் பண விநியோகப் புகார்களை -தி.மு.க.வினர் களத்தில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவித்து வருகிறார்கள். இனிவரும் நாட் களில் இன்னும் அதிகமாக விழிப்புணர்வுடன் இருப்போம்; தேர்தல் களத்தில் மிகச்சிறப்பாக வெல்வோம்.

 

கலைஞர் இல்லாத தேர்தல் களத்தில் முதலமைச்சர் வேட்பாளராகப் பயணிப்பது சுமையா? சுகமா?

 

கலைஞர் இல்லாத தேர்தல் களம் எப்படி சுகமாக இருக்கமுடியும்? ஆனால் அனைத்து துறையிலும் அ.தி.மு.க.வால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தைக் காணும்போது, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து -சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்ற வெறியோடு மத்திய அரசு என்ற அதிகாரத்தை பா.ஜ.க. பயன் படுத்துவதைப் பார்க்கும்போது - என் கண்முன்னால் தமிழ்நாடும் -தமிழ்நாட்டு மக்களும்தான் தெரிகிறார்கள். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ்மொழியின் சிறப்பு, சமூக நீதி, தமிழ்நாட்டின் நலன் -ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் காப்பாற்றும் கடமையை நிறைவேற்ற எத்தகைய சவால்களையும் -சோதனைகளையும் -சுமையையும் நான் ஒரு தனிச் சுகமாகவே கருதுகிறேன். அதுதான் தந்தை பெரியாருக்கு, பேரறிஞர் அண்ணாவிற்கு, முத்தமிழறிஞர் கலைஞருக்கு நான் செலுத்தும் காணிக்கையாக இருக்கமுடியும். ஆகவே, தமிழக மக்களுக்காக தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நடைபெறும் இந்த சட்டமன்றத் தேர்தல்களத்தை நான் ஒரு சுமையாக அல்ல -சுகமான கடமையாக, பொறுப்பாகக் கருதுகிறேன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.